News Just In

2/28/2025 06:27:00 PM

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாக ஊடகப் பணி செய்தோருக்கு அரசாங்க தகவல் பணிப்பாளரினால் கௌரவமளிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாக ஊடகப் பணி செய்தோருக்கு அரசாங்க தகவல் பணிப்பாளரினால் கௌரவமளிப்பு


(ஏ.எச்.ஏ.ஹுஸைன்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஊடகப் பணி செய்த 10 சிரேஸ்ட ஊடகவியலாளர்களுக்கு அரசாங்க தகவல் பணிப்பாளரினால் கௌரவமளிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு அரசாங்க தகவல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஊடகப் பிரிவின் ஏற்பாட்டிலும் மாவட்டச் செயலாளர் ஜஸ்டினா ஜுலேகாவின் ஆலோசனை வழிகாட்டலிலும் 2025 ஆண்டிற்கான ஊடக அதியுயர் விருது வழங்கும் விழா வியாழனன்று 27.02.2025 ஒல்லாந்தர் கோட்டையில் உள்ள மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

நிகழ்விற்கு பிரதம அதிதியாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே. பண்டார, உதவிப் பணிப்பாளர் எல்.பி. திலகரத்ன, மட்டக்களப்பு மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி சிறிகாந்த், மொறவெவ பிரதேச செயலாளர் ஏ. நவேஸ்வரன் மட்டக்களப்பு மாவட்டச் செயலக தகவல் திணைக்கள அதிகாரி வ. ஜீவானந்தன், அதன் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் யூ. உதயகாந்த், விடிவெள்ளிப் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.பீ.எம். பைறூஸ், தொழிலதிபர் எம். செல்வராசா ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

நிகழ்வில் கடந்த சுமார் 25 தொடக்கம் 50 வருடங்களுக்கும் அதிகமான காலமாக உள்நாட்டு யுத்தம், சுனாமி, வெள்ளம், வரட்சி உட்பட்ட இயற்கை செயற்கை இடர்களின்போது ஊடகத்துறையில் பணியாற்றி வரும் சுமார் பத்து ஊடகவியலாளர்கள் சான்றிதழ்கள் வழங்கி, பொன்னாடை போர்த்தப்பட்டு நினைவுச் சின்னம் உட்பட அதியுயர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.

ஐ. பாக்கியராசா, ஏ.எச்.ஏ.ஹுஸைன்இ ரீ.எல். ஜவ்பர்கான், ஆர். தவராஜா, எம்.ஜீ. அப்துல் நாஸர், எஸ்.எம். முஹம்மத் முஸ்தபா, வி.கே. ரவீந்திரன், சிவம் பாக்கியநாதன், எஸ். தவபாலரெட்ணம், வி. பத்மசிறி, ஆகியோர் கௌரவத்தைப் பெற்றுக்கொண்டனர்.

நிகழ்வில் மாவட்ட ஊடகப் பிரிவினால் கௌரவிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் பற்றிய தகவல்களை உள்ளடக்கிய “ஊடகத் தடம்" எனும் சிறப்பு மலர் மாவட்டச் செயலாளர் ஜஸ்டினா ஜுலேகா, மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி சிறிகாந்த் ஆகியோரின் வழிகாட்டலில் தயாரித்து வெளியிட்டு வைக்கப்பட்டது.

மூத்த ஊடகவியலாளர்களுக்கான இவ்வுயரிய விருது மாவட்டத்தில் முதல் தடவையாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

நிகழ்வின்போது “ஊடக ஒழுக்க நெறி மற்றும் ஊடக பயன்பாடு தொடர்பில் பிரதேச ஊடகவியலாளர்களை தெளிவூட்டும் செயலமர்வும்” இடம்பெற்றது.

ஊடக நெறிமுறைகள், பிரதேச ஊடகங்களின் வகிபாகம், கிளீன் சிறீ லங்கா, தேசிய அபிவிருத்தி, வரவு செயலவுத் திட்டம் 2025 ஆகிய விடயங்கள் உள்ளடக்கங்களாகக் கொண்ட இச் செயலமர்வில் 60 இற்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் மாவட்ட ஊடகப்பிரிவின் அலுவலர்களான விநோதினி சுரேஷ்குமார், எம்.எம். பாத்திமா நஸ்ரியா, ஜி. மயூரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்

No comments: