News Just In

11/25/2024 10:05:00 AM

இலங்கையில் சூறாவளி அபாயமா? மறு அறிவித்தல் வரை விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் சூறாவளி அபாயமா? மறு அறிவித்தல் வரை விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை



மீனவர்கள் மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் தேவையற்ற வதந்திகளை நம்பி ஏமாறாமல் விழப்புடன் இருக்குமாறும் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

சூறாவளி ஒன்று உருவாகும் பட்சத்தில் மக்களுக்கு அது தொடர்பில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஊடாக உடனடியாக அறிவிக்கப்படும்.

சூறாவளி உருவாகி இன்று இரவு கல்முனையை தாக்கும் என்று பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம்.

மேலும் வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக அதிக மழைவீழ்ச்சி கிடைக்கக்கூடிய வாய்ப்பு காணப்படுவதனால் அனைவரும் வெள்ள அனர்த்தத்துக்குரிய முன்னாயத்தங்களை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று தாழமுக்கமாக வலுவடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இது மேலும் வலுவடைந்து இலங்கையின் கிழக்கு கரையைக் கடந்து வட மாகாணத்தை ஊடறுத்து தமிழகத்தை நோக்கி நகர்கின்றது.

இதன் காரணமாகக் கிழக்கு மாகாணத்தின் சில இடங்களில் 150 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அத்துடன் வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் 100 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

இதேவேளை, மறு அறிவித்தல் வரை மன்னார் முதல் காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பிராந்தியங்களுக்கு செல்ல வேண்டாம் என கடற்றொழிலாளர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது 35-45 கிலோமீற்றர் வரை பலத்த காற்று வீசக்கூடும்.

அத்துடன் கடலானது இடைக்கிடையே கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது

No comments: