News Just In

12/21/2022 12:09:00 PM

கூட்டுறவாகச் செயற்பட்டதினால் பிரதேச மக்களின் பொருளாதார நிலைமையிலே மாற்றத்தை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது





- ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கூட்டுறவாகச் செயற்பட்டதினால் பிரதேச மக்களின் பொருளாதார நிலைமையிலே நல்ல மாற்றத்தை அவதானிக்கக் கூடியதாக இருப்பதாக வெருகல் பிரதேச செயலாளர் எம்.ஏ. அனஸ் தெரிவித்தார்.

கிராமிய சமூக பொருளாதார அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் வருடாந்தக் கூட்டுறவு விழா ஈச்சிலம்பற்று ஸ்ரீ சண்பக மகா வித்தியாலயத்தில் திங்களன்று 19.12.2022 இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றபோது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

இந்நிகழ்வில் மூதூர், சேருநுவர, வெருகல், மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் இளைஞர் அபவிருத்தி அகம் தன்னார்வ அமைப்பினால் நிதியுதவி அளிக்கப்பட்டு இயங்கி வரும் கிராமிய சமூக பொருளாதார அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் பிரதி நிதிகள் பங்கு பற்றியதோடு அவர்களது உற்பத்திப் பொருட்களும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்ததோடு சிறந்த செயற்பாட்டாளர்களுக்கும் கூட்டுறவு அமைப்புக்களுக்கும் விருதுகளும் நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வில் அதிதியாகக் கலந்து கொண்டு தொடர்ந்து அங்கு பேசிய பிரதேச செயலாளர் அனஸ், வெருகல் பிரதேச முன்னேற்றத்தில் கரிசனை கொண்டுள்ள வீ பெக்ற் நிறுவனமும் திட்டத்தை அமுலாக்கம் செய்யும் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனமும் நன்றிக்குரியவை.

வெருகல் பிரதேச செயலாளர் பிரிவை வளமுள்ள பிரதேசமாக மாற்றுவதில் இளைஞர் அபிவிருத்தி அகம் மிக முக்கிய தரப்பாகக் கைகொடுக்கின்றது. அவர்கள் பல்வேறு வேலைத்திட்டங்களை வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் கூட்டுறவுச் சங்ககங்களினூடாக நடைமுறைப்படுத்தியுள்ளார்கள். இதுவரை ஆறு கூட்டுறவுச் சங்ககங்கள் அமைக்கப்பட்டு அவை செயல்படுகின்றன. இவற்றினூடாக உப உணவுப் பயிர்களை வளர்ப்பதற்கான உள்ளீடுகள் விநறியோகிக்கப்பட்டுள்ளன. ஐயாயிரம் மரவள்ளித் தடிகளை வழங்கி அவை இப்போது அறுவடை செய்யப்பட்டு அதனூடாக மேலும் பல விவசாயக் குட்ம்பங்களுக்கு அவை பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கின்றன. முன்னூறு விவசாயக் குடும்பங்களுக்கு சிறந்த ரக முருங்கை மரக் கன்றுகள் விநியோகிக்ப்பட்டிருக்கின்றன.

குழுவாக விவசாயச் செய்கையில் ஈடுபடுவதற்காக 4 மோட்டார் இயந்திரங்கள் விவசாயக் குழுக்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன.

மேலும் பிரதேசத்தில் யற்கையைப் பேணும் வகையிலும் பொருளாதார வளமாகவும் 10 ஆயிரம் பனம் விதைகளை நடுகை செய்யும் திட்டமும் அமுலாகிறது. தென்னை நாற்று மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதிலிருந்து பயிரிடப்படுகின்ற தென்னங்கன்றுகள் பிரதேச மக்கள் 1500 பேருக்கு கூட்டுறவுச் சங்கங்களினூடாக விநியோகிக்கப்படும்இந்த வகையில் பிரதேச செயலகமும் இளைஞர் அபிவிருத்தி அகமும் இணைந்து பல்வேறு வேலைத் திட்டங்களை செய்து வருவதனால் பிரதேச மக்களின் பொருளாதார நிலைமையிலே நல்ல மாற்றத்தை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது” என்றார்.

இந்நிகழ்வில் சுவீடன் சர்வதேச அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு (வீ எபெக்ற்) நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் தேவசிங்கம் மயூரன், இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும் சங்கங்களின் பதிவாளருமான பொறியியலாளர் என். சிவலிங்கம் உட்பட கூட்டுறவுத்துறை அதிகாரிகளும் இளைஞர் அபிவிருத்தி அகம் திட்ட முகாமையாளர் ரீ. திலீப்குமார் இணைப்பாளர் பொன் சற்சிவானந்தம் உட்பட பயனாளிகளான கிராமிய சமூக பொருளாதார அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டன


No comments: