(கல்லடி - சுதா)
இலங்கை திருநாட்டின் 13வது தேசிய கபோரியானது நேற்றைய தினம் (16) திகதி மாலை 5 மணிக்கு நாடு முழுவதும் ஆரம்பமாகிய நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் தேசிய கபோரி நிகழ்வானது மிகவும் கோலாகலமாக இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட சாரண ஆணையாளர் விவேகானந்தா பிரதீபன் தலைமையில் கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளரும், சிவானந்தா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்க தலைவருமான வீ.வாசுதேவன் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்.
இந் நிகழ்விற்கு ஆன்மீக அதிதியாக மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிஷன் உதவி மேலாளர் ஸ்ரீமத் சுவாமிநீலமாதவானந்தா ஜீ மஹராஜ் கலந்து சிறப்பித்துள்ளார்.
செப்டெம்பர் மாதம் 16ம் திகதி தொடக்கம் 18ம் திகதிவரை நடைபெற ஏற்பாடாகியுள்ள 13வது தேசிய கபோரிக்கு இணையாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்றைய (16) தினம் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்றுவருகின்ற குருளை சாரணர்களுக்கான இந்நிகழ்வானது தொடர்ச்சியாக மூன்று தினங்கள் இடம்பெறவுள்ளது.
அதிதிகள் வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து, மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய நிகழ்வில், இறைவணக்கம், ஆசியுரை என்பன இடம்பெற்று, கொடியேற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டதனைத் தொடர்ந்து, 13வது தேசிய கபோரிக்கான கீதம் இசைக்கப்பட்டு, அதிதிகளின் சிறப்புரை மற்றும் மாணவர்களது கண்கவர் கலை நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டுள்ளது.
இந்நிகழ்வுகளில் குருளைச் சாரணர்களுக்கு பொறுப்பான மாவட்ட உதவி ஆணையாளர் திருமதி.சிவகுமாரி தமிழ்செல்வன்,
உதவி மாவட்ட ஆணையாளர்கள், சாரணத் தலைவர்கள், சாரண ஆசிரியர்கள், அதிபர்கள், சிவானந்தா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள், பெற்றோர்கள் என பெருமளவிலானோர் கலந்து சிறப்பித்துள்ளனர்.
குறித்த மூன்று நாள் பாசறைக்கு சிவானந்தா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கமும், பழைய சாரண மாணவர்களும் பூரண அனுசரனையினை வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments: