News Just In

8/11/2021 07:27:00 PM

ஆமை வேகத்தில் பயணித்தவர் கைது- 16 பாலாமைகளும் கைப்பற்றப்பட்டன...!!


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
நபரொருவர் பாலாமைகளை பிடித்து வந்து அவற்றை இறைச்சிக்காக விற்பனை செய்வதாகக் கிடைத்த இரகசியத் தகவலைப் பின்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பதுங்கியிருப்பில் 16 பாலாமைகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

செவ்வாய்க்கிழமை மாலை 10.08.2021 இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் அக்கரைப்பற்று முருகன் கோயில் வீதி கண்ணகிபுரம் 2ஐச் சேர்ந்த தருமலிங்கம் பிரதீபன் (வயது 31) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

விஷேட புலனாய்வுப் பொலிஸார் அம்பாறை – அக்கரைப்பற்று வீதி 4ஆம் கட்டைப் பகுதியில் மறைந்திருந்து நோட்டமிட்டபோது சைக்கிளில் ஆமைகளை ஏற்றிக் கொண்டு ஆமை வேகத்தில் பயணித்தவர் திடீர்ச் சோதனையின்போது சிக்கியுள்ளார்.

சைக்கிளில் கட்டப்பட்டிருந்த பெட்டிக்குள் 16 பாலாமைகள் உயிருடன் இருந்துள்ளன.

சந்தேக நபரைக் கைது செய்த பொலிஸார் பாலாமைகளையும் கைப்பற்றியுள்ளதோடு மேலதிக விசாரணைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

குளம் குட்டை வாய்க்கால் நீரோடைகளில் பாலாமைகளின் பல்லுயிர்த் தன்மை இன்றியமையாதது என பல்லுயிர்த் தன்மை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments: