News Just In

4/15/2026 04:21:00 PM

அமெரிக்க இராணுவம் மீதாக தாக்குதலுக்கு சீன செயற்கைக்கோள் உதவி! IRGC குறித்து கசிந்த அறிக்கை

அமெரிக்க இராணுவம் மீதாக தாக்குதலுக்கு சீன செயற்கைக்கோள் உதவி! IRGC குறித்து கசிந்த அறிக்கை


மத்திய கிழக்கு முழுவதும் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களைத் தாக்குவதற்கு ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) ஒரு சீன செயற்கைக்கோளை வாங்கியதாகக் கூறி, அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீனாவின் எர்த். ஐ. கோ (Earth Eye Co), எம்போசாட்என்ற நிறுவனங்கள், தங்களது சுற்றுப்பாதையில் செலுத்தும் அமைப்புகளை வழங்குவதாகக் கூறி , அந்தச் செயற்கைக்கோளை விண்வெளியில் ஏவிய பிறகு, 2024-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அது கையகப்படுத்தப்பட்டதைக் காட்டும் ஆவணங்களை(கசிந்த) தாங்கள் பெற்றதாக செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சீனாவை தளமாகக் கொண்ட செயற்கைக்கோள் கட்டுப்பாடு மற்றும் தரவுச் சேவைகளை வழங்கும் நிறுவனமான எம்போசாட் இயக்கும் வர்த்தகத் தரை நிலையங்களை அணுக ஐ.ஆர்.ஜி.சி-க்கு அனுமதி வழங்கப்பட்டதையும் அந்த ஆவணங்கள் காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சீன நிறுவனம் மற்றும் ஐ.ஆர்.ஜி.சி-க்கு இடையேயான உறவு குறித்து சீன அரசாங்கத்திற்கு ஏதேனும் தெரியுமா என அமெரிக்காவில் உள்ள சீனத் தூதரகத்திடம் வினவிய போது “சீனாவிற்கு எதிராக ஊக மற்றும் மறைமுகத் தவறான தகவல்களைப் பரப்பும் சம்பந்தப்பட்ட தரப்பினரை நாங்கள் உறுதியாக எதிர்க்கிறோம்” என்று பதிலளித்ததாக கூறப்படுகிறது.

ஈரானின் சொந்த செயற்கைக்கோள்களால் வழங்க முடியாத மிக உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்களை இந்தத் தரவுகள் வழங்கியதாகவும், சவூதி அரேபியா, பஹ்ரைன், ஈராக், குவைத், ஜோர்தான், ஓமான் மற்றும் ஜிபூட்டி ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களைக் குறிவைக்க அல்லது கண்காணிக்க ஈரானியப் படைகளுக்கு இது உதவியதாகவும் செய்தியில் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் டொனால்ட் ட்ரம்ப் அடுத்த மாதம் பெய்ஜிங்கில் தனது சீன சகா ஷி ஜின்பிங்கை சந்திக்கத் தயாராகி வரும் வேளையில், அமெரிக்கப் படைகளைக் குறிவைக்க சீன செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது சர்ச்சைக்குரியதாக அமையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மேலும், சமீபத்திய உளவுத்துறை மதிப்பீடுகள் குறித்த கூற்றுப்படி, அடுத்த சில வாரங்களுக்குள் ஈரானுக்கு புதிய வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்க சீனா தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை சுட்டிக்காட்டியுள்ளதாக கூறியுள்ளது.

No comments: