News Just In

1/30/2026 07:53:00 PM

மாணவர்களிடம் பணம் அறவிட்டு பாராட்டு விழாக்கள் ; தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் மெளனம் காக்கின்றது - இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் விசனம்

மாணவர்களிடம் பணம் அறவிட்டு பாராட்டு விழாக்கள் ; தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் மெளனம் காக்கின்றது - இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் விசனம்



மாணவர்களிடம் பணத்தை அறவிட்டு அவர்களுக்கே பாராட்டு விழாக்களை நடத்தும் வழக்கம் கடந்த ஆட்சி காலத்தில் தாராளமாக இடம்பெற்றது. நாம் அதற்கு எமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்தோம். ஆனால் தற்போதைய அரசாங்கத்திலும் இவ்வாறான சம்பவங்கள் எல்லா இடங்களிலும் இடம்பெறுகின்றன என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வுகளே அதிகம் இடம்பெற்று வருகின்றன.

இதற்கு பாடசாலை சமூகமானது பெற்றோர்களை அழைத்து கதைத்து இந்நிகழ்வை பெற்றோர்களே செய்வது போன்ற போர்வையில் தாமே முன்னின்று சகல விடயங்களையும் கையாள்கின்றனர். எந்த இடத்திலும் பாடசாலையை சம்பந்தப்படுத்தாது பெற்றோர்களின் வங்கி கணக்கிலக்கங்களை வழங்கி அதில் பணத்தை சேகரித்து நிகழ்வை ஏற்பாடு செய்கின்றனர். இதற்காக இவர்கள் வாட்ஸ்அப் குழுவையும் வைத்துக்கொள்கின்றனர்.

இதில் என்ன ஆச்சரியமான சம்பவம் என்றால் இவ்வாறான நிகழ்வுகளின் பின்புலம் அறிந்து கல்வி அதிகாரிகளே நிகழ்வின் பிரதம அதிதிகளாகவும் சிறப்பதிதிகளாகவும் கலந்து கொள்கின்றனர். தரம் ஒன்று, சாதாரண தரம் மற்றும் உயர்தரத்துக்கு பெருந்தொகை பணத்தை அறவிட்டு சில பிரபல பாடசாலைகள் வெளிமாணவர்களை சேர்த்துக்கொள்கின்றன.

சில பாடசாலைகளில் ஆசிரியர்களே பெற்றோர்களாக இருப்பதால் அது குறித்து அலட்டிக்கொள்வதில்லை. ஆனால் கல்வி மறுசீரமைப்பை கொண்டு வருவதிலும் அதில் மாற்றங்களை ஏற்படுத்துவதிலும் முன்னிற்கும் தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியிலும் இவ்வாறு அப்பாவி பெற்றோர்களிடம் பணத்தைப் பெற்று பாராட்டு விழாக்களை இடம்பெறுவதை எவ்வாறு ஏற்றுக்கொள்வது? மேலும் இந்த மாணவர்களில் தித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களும் இருக்கும் போது கல்லூரி நிர்வாகங்கள் இப்படி ஈவிரக்கமின்றி நடந்து கொள்ளக் கூடாது. இப்படி பாராட்டு விழாக்களை நடத்தும் கல்லூரிகளை இனம் கண்டு நிகழ்வின் செலவீனங்கள் மற்றும் நிதி சேகரிப்பு குறித்து முழுமையான ஆய்வை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பில் நாம் உயர்கல்வி மற்றும் மாகாண கல்வி அமைச்சுக்கு அழுத்தங்களை வழங்குவோம் எனத் தெரிவித்தார்

No comments: