
பெரிய தாய்க்கட்சி என்று சொல்லிக் கொள்கின்ற கட்சியொன்று சில இடங்களில் ஏனையோருக்கு விட்டுக்கொடுக்கும் மனநிலைக்கு வந்திருக்க வேண்டும் ஆனால் அது நடைபெறவில்லை என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் (DTNA) செயலாளர் நா. இரட்ணலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் வவுனியா (Vavuniya) உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிட்டு வெற்றிபெற்றோருக்கு சத்தியப்பிரமணம் செய்யும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் தேசியப் பரப்பில் இயங்கும் கட்சி ஒன்று தமிழர்களுடைய நிர்வாகத்தை மேற்கொள்ள வேண்டும். அதற்கு ஏனையோரும் ஒத்துழைக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு.
முதலில் நாம் தமிழரசுக் கட்சியுடன் தான் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தோம். எனினும் எந்த விட்டுக்கொடுப்பையும் செய்வதற்கு அவர்கள் முன் வரவில்லை. அவர்களுக்கு இருக்கும் உள்ளகப் பிரச்சினையா அல்லது அந்த உறுப்பினர்களின் மனநிலையா என்பது எனக்கு தெரியவில்லை.
ஆனால் ஒரு பெரிய தாய்க்கட்சி என்று சொல்லிக் கொள்கின்ற ஒரு கட்சி ஒரு சில இடங்களிலும் ஏனையோருக்கு விட்டுக்கொடுக்கும் மனநிலைக்கு வந்திருக்க வேண்டும் ஆனால் அது நடைபெறவில்லை.
அந்த வகையில் தான் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதைவேளை தமிழ் தேசிய பேரவையுடனும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்தோம்.
தமிழ் தேசிய பேரவையை பொறுத்தவரையில் சில சபைகளை பகிர்ந்து கொள்வதற்கும் எமக்கு சில சபைகளை விட்டுக் கொடுப்பதற்கும் முன்வந்திருந்தார்கள். அந்த வகையில் நாங்கள் அவர்களுடன் ஒரு உடன்படிக்கையை செய்திருக்கின்றோம்.
அரசியலில் நாங்கள் வெறுமனே உறுப்பினர்களாக இருந்துவிட்டு நான்கு வருடம் முடிந்ததன் பின்னர் எமது கட்சியின் இருப்பிடம் எங்கே என்று தெரியாத அளவுக்கு போய்விடுவோம். ஆகவே அரசியலில் இது சாதாரணமான விடயம்
அதிகாரம் இருந்தால் மாத்திரமே ஒரு அரசியல் கட்சி ஈர்ப்புடன் இருக்க முடியும். எனவே நாங்கள் ஏனைய கட்சிகளுக்கு பாரிய மோசமான நிலையை ஏற்படுத்தாத வகையில் சாதகமான இடங்களில் ஆட்சி அமைப்பதற்கான செயற்பாடுகளை செய்து இருக்கின்றோம்.
ஆகவே நாங்கள் சில சபைகளை ஆட்சி அமைக்கலாமென எண்ணுகிறோம். வவுனியா மாநகர சபையிலும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என தெரிவித்தார்
No comments: