News Just In

3/29/2025 08:39:00 PM

தமிழ்க் கட்சிகள் சார்பில் 7 பேர் மோடியைச் சந்திக்க அனுமதி!

தமிழ்க் கட்சிகள் சார்பில் 7 பேர் மோடியைச் சந்திக்க அனுமதி



இலங்கை வரும் இந்தியப் பிரதமரை இலங்கையின் தமிழ்க் கட்சிகள் சார்பில் 7 பேர் சந்தித்துக் கலந்துரையாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 4 ஆம் திகதி மாலை கொழும்புக்கு வருகை தந்து 6 ஆம் திகதி காலை இந்தியா திரும்புகின்றார்.

இதன்போது அவரைச் சந்திப்பதற்குச் சந்தர்ப்பம் கோரி பல தமிழ்த் தரப்புக்களும் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தை நாடியுள்ளனர்.

இதற்கமைய தமிழர் தரப்பில் 7 பிரதிநிதிகள், மோடியைச் சந்திப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் 4 பேரும், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) சார்பில் ஒருவரும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி் சார்பில் இருவருமாக இந்த 7 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் சி.வி.கே.சிவஞானம், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன் மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோரும், அகில இலங்கை தமிழக காங்கிரஸ் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி் சார்பில் செல்வம் அடைக்கலநாதனுடன் பங்காளிக் கட்சித் தலைவர்களில் ஒருவருமாக இந்த 7 பேரும் மோடியைச் சந்திக்கவுள்ளனர்.

இந்தச் சந்திப்பு கொழும்பில் எதிர்வரும் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments: