News Just In

12/14/2024 03:35:00 PM

தமிழரசுக் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தில் குழப்பம்! மாவையை கடும் தொனியில் எச்சரித்த சாணக்கியன்!

தமிழரசுக் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தில் குழப்பம்! மாவையை கடும் தொனியில் எச்சரித்த சாணக்கியன்



வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசுகட்சியின் மத்தியசெயற்குழு கூட்டத்தில் கடும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழரசுகட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிற்கு பின்னர் முதல் முறையாக மத்தியகுழு கூடியுள்ளது.

10 மணியளவில் கூட்டத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் வருவதற்கு தாமதமாகியதால் கூட்டத்தை ஆரம்பிப்பதற்கு செயலாளர் முற்பட்டுள்ளார்.

இதன்போது மாவை சேனாதிராஜா வந்தபின்னர் கூட்டத்தை ஆரம்பிக்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் கோரியபோது, “அவர் பதவி விலகிவிட்டார் அவரின் தலைமையில் கூட்டம் நடத்த முடியாது. எனவே உடனடியாக கூட்டத்தை ஆரம்பிக்குமாறு” இரா.சாணக்கியன் கடும் தொனியில் தெரிவித்துள்ளார்.

மேலும், மாவை சேனாதிராஜாவுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி கூட்டத்திற்கு வருமாறு கோருங்கள் என சிவமோகன் குறிப்பிட்டபோது, இடையில் குறுக்கிட்ட சாணக்கியன் இது 'கோல் சென்ரர் அல்ல, கட்சி.' "உங்கள் வைத்தியசாலை இதுவல்ல" என்று பதிலளித்துள்ளார்.

அவர் மாத்திரம் அல்லாமல் ஏனைய சில உறுப்பினர்களும் கூட்டத்தை உடனே ஆரம்பிக்குமாறு கூறிய நிலையில் சிவமோகனுக்கும், அவர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

மேலும், கூட்டத்தை சிரேஸ்ட உபதலைவர் தலைமையில் உடனடியாக நடத்துங்கள் அல்லாவிடில் குழப்புவர்களை வெளியேற்ற வேண்டிவரும் என பீற்றர் இளஞ்செழியனும் தெரிவித்திருந்தார்.

தனது நிலைப்பாட்டில் சிவமோகனும் விடாப்பிடியாக நின்றமையினால் நீண்டநேரமாக கூட்டம் ஆரம்பிக்கப்படாமல் வாக்குவாதம் நீடித்தது. சிவமோகனுக்கு அருகில் எழுந்துசென்ற சுமந்திரன் அவரை சாமாதானப்படுத்திய போதும் அது பலனளிக்கவில்லை.

இந்நிலையில் 10.45 மணியளவில் கூட்டம் இடம்பெறும் மண்டபத்திற்கு மாவை சேனாதிராஜா வருகை தந்திருந்த நிலையில், "உங்கள் தலைமையில் கூட்டத்தை நடத்த முடியாது மாவை ஐயா. எனவே அந்த கதிரையில் இருக்க வேண்டாம் இந்த பக்கம் இருங்கள்" என்ற இரா. சாணக்கியனை பொருட்படுத்தாது அவர் முன்பகுதியில் உள்ள இருக்கையில் சென்று அமர்ந்தார்.

அதன் பின்னர் கூட்டத்தில் அமைதி ஏற்பட்டதுடன் கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், செயலாளர் வைத்தியர் ப.சத்தியலிங்கம், சி.வி.கே.சிவஞானம், நாடாளுமன்ற சி .சிறீதரன், இரா.சாணக்கியன், து.ரவிகரன், க.கோடீஸ்வரன், ஞா.சிறிநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எ.சுமந்திரன், சீ.யோகேஸ்வரன், சி.சிவமோகன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, த.கலையரசன் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டுள்ளனர்

No comments: