News Just In

7/09/2024 04:40:00 PM

ஓய்வூதியம் பெறுபவர்கள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்!





”தொழில் ரீதியாகப் பேரம் பேச முடியாதவர்களாகக் காணப்படும் ஓய்வூதியம் பெறுநர்களின் குறைபாடுகளை அரசு உணர்ந்து செயற்படுவது இன்றியமையாத சமூகப் பொறுப்பாகும்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஓய்வூதியம் பெறுவோர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”ஓய்வு கால வாழ்க்கையை நிம்மதியாக வாழ்வதே ஓய்வூதியம் பெறுபவர்களின் குறிக்கோளாக இருந்த போதிலும், அரசின் பல்வேறு கொள்கைகளால் அவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக சிரேஷ்ட பிரஜைகளின் நிரந்தர வைப்புக்களுக்கான வட்டி 15% லிருந்து 7% ஆக குறைக்கப்பட்டுள்ளது. சில வங்கிகள் இந்த நிலையான வைப்பு மீதான வட்டிக்கு கூட வரி விதிக்கின்றன. இந்த வரிப்பணம் மீண்டும் சிரேஷ்ட பிரஜைகளுக்கு கிடைக்கும் என கூறப்பட்டாலும், இங்கு நிலவும் குழப்ப நிலை காரணமாக பல சிரேஷ்ட பிரஜைகள் இதற்கு விண்ணப்பிக்காமல் உள்ளனர்.

எனவே இது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனவும், வட்டியை மீண்டும் 15% ஆக அதிகரிக்குமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.

அத்துடன் நாடு ஸ்திரப்படுத்தப்பட்டு புத்துயிர் பெற்றிருந்தால், ஓய்வூதிய சமூகத்திற்கான இந்தக் கடமையை நிறைவேற்றிக் கொடுக்குமாறும் கேட்டுக் கொள்கின்றேன் ” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

No comments: