News Just In

3/13/2024 10:31:00 AM

இஸ்லாம் மதத்திற்கு மாறிய குற்றவாளி 14 வருடங்களின் பின் கைது!







மட்டக்களப்பில் இரு சிறுமிகளை சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் கைதாகி நீதிமன்ற பிணையில் வெளிவந்து நீதிமன்றில் ஆஜராகாமல் இருந்த நிலையில் மேல் நீதிமன்றில் 7 வருட சிறைத்தண்டனை வழங்கி தீர்பளித்து திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, 14 வருடங்களாக மதம் மாறி பெயரை மாற்றி பொலன்னறுவையில் தலைமறைவாகி இருந்து வந்த குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் (11) இவர் கைது செய்யப்பட்டதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள திருப்பெருந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய குறித்த நபர் நாவற்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பெண் பிள்ளைகளின் தாய் ஒருவரை திருமணம் முடித்த நிலையில் மனைவியின் இரு பெண் பிள்ளைகளை அடித்து சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் 2009 ம் ஆண்டு கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகி வந்துள்ள அவரை, மட்டு மேல் நீதிமன்றிம் கடந்த 2016-2-25 ம் திகதி குற்றவாளி என இனங்கண்டு அவருக்கு 5 வருட சிறைத்தண்டனையும் 20 ஆயிரம் ரூபாவை அபதாரமாக செலுத்துமாறும் அதனை 3 மாதத்தில் செலுத்த தவறின் 3 மாதங்கள் சிறைத்தண்டனையும் பாதிக்கப்பட்ட இரு சிறுமிகளுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா வீதம் 2 இலட்சம் ரூபாவை செலுத்துமாறும் அதனை செலுத்த தவறின் 2 வருட சிறைத்தண்டனையும் வழங்கி அவருக்கு திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது .

இந்த நிலையில் குறித்த நபர் தொடர்பாக மேற்கொண்ட விசாரணையில் குறித்த நபர் பாதிக்கப்பட் சிறுமிகள் உட்பட குடும்பத்துடன் இஸ்லாம் மதத்திற்கு மதம் மாறி அங்கு ஹூசையன் என பெயரை மாற்றி பொலன்னறுவையில் வசித்து வந்துள்தை கண்டறிந்தனர்.

இதனையடுத்து பொலிஸ் சார்ஜன் அரசரட்டணம் கோகுலன் குறித்த குற்றவாளியுடன் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு சாமர்த்தியமாக பேசி இன்று பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து கைது செய்துள்ளார்.

கைது செய்யப்பட்ட குற்றவாளியை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

No comments: