News Just In

11/17/2023 03:37:00 PM

கல்முனை மாநகர விடயமாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க - பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் சந்திப்பு !




நூருல் ஹுதா உமர்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பாராளுமன்ற வரவுசெலவு திட்ட விவாதத்தில் உரையாற்றிமைக்கு இணங்க கல்முனை நகர அபிவிருத்தி தொடர்பில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் அன்றையதினம் சந்தித்து கலந்துரையாடினர்.

இந்த சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களுடன் முன்னாள் அமைச்சரும், ஜனாதிபதி ஆலோசகருமான பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்ஸா, அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இசாக் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஆரம்பிக்கப்பட்ட கல்முனை மாநகர அபிவிருத்தித்திட்டம் மந்தகதியில் இருப்பதனால் 2024ஆம் ஆண்டின் வரவுசெலவு திட்டத்தினூடாக இந்த அபிவிருத்தி திட்டங்கள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்ததுடன் பெரியநீலாவணை, மருதமுனை, கல்முனை, சாய்ந்தமருது, பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை, மனைச்சேனையை உள்ளடக்கியதாக கல்முனை மாநகரில் பல கட்டிடங்களும், திட்டங்களும் முன்மொழியப்பட்டிருந்தாலும் கூட அவை இன்னும் செயற்படுத்தப்படாமல் இருக்கிறது என்ற விடயத்தையும் ஹரீஸ் எம்.பி அமைச்சர் பிரசன்னவுக்கு எடுத்து கூறினார்.

இது தொடர்பில் நகர அபிவிருத்தி அதிகாரசபை தலைவரை தொடர்புகொண்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கல்முனை நகர அபிவிருத்தி தொடர்பிலான தற்போதைய நிலைகளையும், எதிர்கால விடயங்களையும் கேட்டறிந்து கொண்டதுடன் கல்முனை நகர அபிவிருத்தி தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை நகர அபிவிருத்தி அதிகாரசபை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் உயர்மட்ட கலந்துரையாடலொன்றை நடத்தி துரிதகதியில் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக இதன்போது அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உறுதியளித்துள்ளார்.


No comments: