News Just In

10/28/2023 06:39:00 PM

பாடசாலைக்குள் நுழைந்து மாணவனை தாக்கிய குற்றச்சாட்டில் நீதிமன்ற உத்தியோகத்தர் கைது - மட்டக்களப்பில் சம்பவம்


மட்டக்களப்பு நகரிலுள்ள பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றில் உட்நுழைந்து, தனது மகனை தாக்கிய இரு மாணவர்களுக்கு பதிலாக வேறொரு மாணவனை தாக்கியதில், அந்த மாணவன் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதிமன்றில் கடமையாற்றிவரும் உத்தியோகத்தர் ஒருவரை இன்று சனிக்கிழமை (28) கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பாடசாலையில் தரம் 9இல் கல்வி கற்று வரும் மாணவன் ஒருவரை சக மாணவர்கள் இருவர் தாக்கியதாக பாதிக்கப்பட்ட மாணவன் தனது பெற்றோரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

அதனையடுத்து, நேற்று வெள்ளிக்கிழமை (27) பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தையாரான நீதிமன்ற ஊழியர் பாடசாலைக்குள் நுழைந்து, தனது மகனை தாக்கிய இரு மாணவர்களுக்கு பதிலாக வேறொரு மாணவனை தாக்கியுள்ளார்.

அதில் காயமடைந்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதல் தொடர்பாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவரின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து இடம்பெற்ற விசாரணையின் அடிப்படையில் நீதிமன்றில் கடமையாற்றிவரும் தாக்குதல் நடத்திய நபரை சந்தேகத்தின் பேரில் இன்று கைது செய்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: