News Just In

5/23/2023 07:04:00 PM

அரசாங்க ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

அரசாங்க சேவையிலிருந்து ஓய்வுபெறும் பணியாளர்களுக்கு உரிய ஓய்வூதியத்தை காலதாமதம் இன்றி செலுத்துவதற்கும், அது தொடர்பான வேலைத்திட்டம் தொடர்பில் மக்களை தெளிவுபடுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத் குமார சுமித்திராராச்சி, ஓய்வூதிய திணைக்களத்துக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வை குழு முன்னிலையில் அண்மையில் ஓய்வூதியத் திணைக்களம் அழைக்கப்பட்டிருந்தபோதே இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன்போது ஓய்வூதியம் பெறுவதற்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டியதால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் இது நீண்டகாலமாக நிலவிவரும் பிரச்சினை எனவும், இது தொடர்பில் அடிக்கடி முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாகவும் ஜகத் குமார சுமித்திராராச்சி தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் உரிய முறையில் பூர்த்தி செய்யப்பட்ட ஓய்வூதிய விண்ணப்பத்தை பெற்ற ஒரு மாதத்திற்குள் ஓய்வூதியத்தை வழங்க முடியும் என்று சுட்டிக்காட்டிய அதிகாரிகள், விண்ணப்பப் படிவம் உரிய முறையில் பூர்த்தி செய்யப்படாமையால் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த உறுப்பினர்கள்,“ஓய்வூதியம் தொடர்பான தகவல்களை அறிய முறையான அமைப்பு இல்லாததால் ஓய்வூதியத் துறை குறித்து மக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றம் நிலவுகின்றது.

எனவே, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மக்களுக்கு இலகுவாக சேவைகளை வழங்கக்கூடிய வகையில் இந்த முறைமை அமைக்கப்பட வேண்டும்.

ஓய்வூதியம் தொடர்பில் ஒவ்வொரு பிரதேச செயலகத்திற்கும் பட்டதாரி உத்தியோகத்தர் ஒருவரை நியமிப்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த ஓய்வூதியம் பெறுபவர்களின் சங்கங்களை குழு முன்னிலையில் அழைத்து அவர்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வது சரியானது.”என்று உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

No comments: