News Just In

5/15/2023 02:56:00 PM

களுவாஞ்சிகுடியில் 17 வயது மாணவன் கடலில் மூழ்கி சடலம் மீட்பு!




மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் கடலில் மூழ்கி காணாமல் போன மாணவனின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

இம்முறை சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர் ஒருவர் நேற்று மாலை பெரியகல்லாறு கடலில் குளிக்கச்சென்ற நிலையில் காணாமல் போயிருந்தார்.

பெரியகல்லாறு,பொற்கொல்லர் வீதியை சேர்ந்த பாலச்சந்திரன் ஜெசான் என்னும் 17 வயதுடைய மாணவரே இவ்வாறு காணாமல் போயிருந்தார்.

மூன்று பேர் கடலுக்குள் குளிக்கச்சென்ற நிலையில் குறித்த மாணவன் கடல் அலையில் அடித்துச்செல்லப்பட்டிருந்தார்.

இந்நிலையில் காணாமல் போன மாணவனின் சடலம் இன்று காலை கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

No comments: