News Just In

3/27/2023 07:10:00 AM

அரச நிறுவனங்கள் தொடர்பில் வெளியான தகவல்!

இலங்கையில் தனியார் மயமாக்கப்பட வேண்டிய சுமார் நூற்றி இருபது அரச நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அந்த நிறுவனங்கள் அனைத்தும் அடையாளம் காணப்பட்டு பட்டியலிடப்பட்டு, பல கட்டங்களாக அவற்றைத் தனியார் மயமாக்கும் திட்டம் தீட்டப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இவற்றில் பொதுத்துறை நிறுவனங்களில் இலாபம் ஈட்டும் மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அரச நிறுவனங்களின் உற்பத்தித் திறனை அதிகரித்து, அரசுக்குச் சொந்தமான பங்குகளை தனியாருக்கு வழங்குவதன் மூலம் அரச வருமானத்தை அதிகரிப்பதே இதன் நோக்கமாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதன் முதற்கட்டமாக, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனம், ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனம், இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம், கொழும்பு கிராண்ட் ஹயாட் ஹோட்டல், ஹில்டன் ஹோட்டல், லிட்ரோ லங்கா நிறுவனம் மற்றும் லங்கா ஹாஸ்பிடல்ஸ் ஆகிய நிறுவனங்கள் தனியார் துறைக்கு மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் லங்கா ஹாஸ்பிடல்ஸ் நிறுவனத்தின் பங்குகளை தனியார் துறைக்கு மாற்றுவதற்கு கடந்த வாரம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments: