News Just In

1/09/2023 07:39:00 AM

தாயை பழி வாங்க சிறுமியை துன்புறுத்திய கணவன் - மனைவி!

கொழும்பின் புறநகர் பகுதியான கெஸ்பேவ பிரதேசத்தில் 11 வயது நிரம்பிய பாடசாலை மாணவியின் தலைமுடியை வெட்டியதாகக் கூறப்படும் கணவன் - மனைவி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாணவியின் தாயாருடன் ஏற்பட்ட தகராறில் பழிவாங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த கணவனும் மனைவியும் சிறுமியின் தாயை தேடி அவரது வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது சிறுமி மட்டுமே வீட்டில் இருந்ததாக பொலிஸ் தெரிவித்துள்ளனர்.

சிறுமியிடம் அவரது தாயைப் பற்றி விசாரித்து, அவர் வீட்டில் இல்லை என்று கூறியதையடுத்து, தம்பதியினர் சிறுமியைப் பிடித்து தலைமுடியை வெட்டியுள்ளனர் என்று பொலிஸ் அதிகாரி கூறினார்.

தாய் வீட்டுக்கு வந்ததும், வெட்டிய தலைமுடியைக் காட்டி, நடந்ததை சிறுமி தெரிவித்துள்ளார். தாயும், சிறுமியும் வெட்டிய தலைமுடியை பையில் வைத்துக்கொண்டு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

சிறுமியின் வாக்குமூலத்திற்கமைய, சந்தேகத்திற்குரிய கணவன் மற்றும் மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் கெஸ்பேவ பொலிஸ் பிரிவில் வசிப்பவர்கள் என தெரியவந்துள்ளது.

நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்காக வெட்டப்பட்ட முடிகளும் பொலிஸாரின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது.

No comments: