சென்னையில் கொட்டும் மழையில் நனைந்துக்கொண்டு குடைப்பிடித்து சென்ற புதுமணத்தம்பதியின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளது.
இதனையடுத்து, சென்னையில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சென்னையில் பெய்து வரும் மழையால் பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகள் வெள்ள நீரில் வாகனத்தை இயக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். சென்னை புளியந்தோப்பு, தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மழை நீர் தேங்கி நிற்கிறது. சாலைகள் படுமோசமாக உள்ளதால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் கனமழையால் சென்னை மாநகரில் பல திருமணங்கள் இன்று நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள ஆஞ்சிநேயர் கோவிலுக்குள் தண்ணீர் தேங்கியதால், இன்று 5 திருமணங்கள் நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டது.
கொட்டும் மழையில் கோவிலுக்கு வெளியே புதுமணத் தம்பதிகள் வரிசையில் நின்றுக்கொண்டிருந்தனர். அதில், ஒரு ஜோடி குடைகளைப் பிடித்துக் கொண்டு தண்ணீர் நிறைந்துள்ள கோவிலுக்குள் நடந்து சென்றனர்.
தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
No comments: