News Just In

9/07/2022 08:42:00 AM

காணி மீட்பில் கடந்து வந்த பாதையும் எதிர்கால செயற்பாடுகள் பற்றி ஆராய்வு





- ஏ.எச்.ஏ. ஹுஸைன்

திட்டமிட்ட நிலப்பறிப்புக்களால் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளமை பற்றியும் அவற்றை மீட்பதற்கான முன்னெடுப்புக்களில் கடந்து வந்த பாதை பற்றியும் ஆராயும் செயற்பாட்டாளர்களின் கற்றுக் கொண்ட பாடங்கள் எனும் மீளாய்வுக் திங்களன்று அக்கரைப்பற்றில் இடம்பெற்றது.

மனித எழுச்சி அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த காணி மீட்பு கடந்து வந்த பாதை மீளாய்வுக் கூட்டத்தில் காணி உரிமைகளுக்கான அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலணியின் செயற்பாட்டாளர்களான துறைசார்ந்தோரும் புத்திஜீவிகளும் விவசாயிகளும் காணிகளைப் பறிகொடுத்தோரும் கலந்து கொண்டனர்.

மனித எழுச்சி அமைப்பின் பணிப்பாளர் கே. நிஹால் அஹமட் தலைமையில் இடம்பெற்ற இந்த மீளாய்வுக் கூட்டத்தில் கடந்த கால நடவடிக்கைகளின் முன்னேற்றமும் இடர்பாடுகளும் எதிர்கால திட்டமிடல் பற்றியும் ஆராயப்பட்டது.

நாடு தற்போது உணவுப் பஞ்சத்தை எதிர்கொள்ளும் வேளை அம்பாறை மாவட்டத்தில் சுமார் 15 ஆயிரம் ஏக்கர் பொன் விளையும் பூமி விவசாயம் செய்ய முடியாமல் தடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்தக் காணிகளை அரசு உடனடியாக உரியவர்களிடம் உணவு உற்பத்திக்காக கையளிக்க வேண்டும் என பாதிக்கப்பட்டோர் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இந்த விடயத்தில் அதிகாரிகள் தம்மை கிட்டத்தட்ட ஒரு விரக்தி நிலைக்கு இட்டுச் சென்றிருப்பதாகவும் பாதிக்கப்பட்டோர் கருத்துத் தெரிவித்தனர்.

நாடு உணவுப் பஞ்சத்தை எதிர்நோக்கும் என்று துறைசார்ந்த நிபுணர்களால் எச்சரிக்கப்பட்டிருக்கின்ற இச்சந்தர்ப்பத்தில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக உணவு உற்பத்தியில் சிறப்பான பங்கை வகித்த பொன் விளையும் பூமிகளான எமது காணிகள் அதிகாரிகளால் தடுக்கப்பட்டிருக்கின்றன்.

திட்டமிட்ட நிலப்பறிப்புக்களால் அம்பாறை மாவட்டத்தில் உள்ள 12 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 4652 குடும்பங்களினது 14127 ஏக்கர் பரப்பளவான காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளதாக அங்கு தெரிவிக்கப்பட்டது.

இது விடயமாக கடந்த காலங்களில் பல முன்னெடுப்புக்கள் இடம்பெற்றுள்ளன. தொடர்ந்தும் இந்தக் காணிகளை மீட்டெடுப்பதற்கான முன் முயற்சிகள் தொடரும் என அங்கு வலியுறுத்தப்பட்டது.

வளவாளர்களாக சட்டத்தரணிகள் சரளா இம்மானுவெல் மற்றும் சந்துன் துடுகல ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினர்.


No comments: