News Just In

7/26/2022 10:21:00 AM

முச்சக்கரவண்டி சாரதிகள் எரிபொருளை பெற்றுக்கொள்ள ... !



முச்சக்கரவண்டி சாரதிகள், தமது பிரதேசத்துக்கு பொறுப்பான பொலிஸ் நிலையத்தில் பதிவினை மேற்கொண்டு, எரிபொருள் பெறுவதற்கான ஒரு நிரப்பு நிலையமொன்றை ஒதுக்கிக்கொள்ளுமாறு மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் காஞ்சன தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவொன்றில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

எதிர்வரும் ஜூலை மாதம் 31 ஆம் திகதிக்கு முன் முச்சக்கரவண்டி சாரதிகள் பதிவினை மேற்கொள்ளுமாறு குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் பொலிஸ் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்டு ஒதுக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மாத்திரமே குறித்த முச்சக்கரவண்டிகளுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, விவசாய உபகரணங்கள், மின்பிறப்பாக்கிகள் மற்றும் ஏனைய உபகரணங்களை பயன்படுத்துபவர்கள் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக அந்தந்த பிரதேச செயலகங்களில் பதிவு செய்ய முடியு எனவும் அமைச்சர் காஞ்சன குறிப்பட்டுள்ளார்.

தங்களது வாராந்த எரிபொருள் தேவை தொடர்பான தகவல்களுடன் இவ்வாறு பதிவு செய்து ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தை ஒதுக்கிக் கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, செஸி எனப்படும் அடிச்சட்ட இலக்கம் மூலம் QR முறைமையை பதிவு செய்ய முடியாத வாகன உரிமையாளர்கள், வெள்ளிக்கிழமை முதல் வாகன வருமான வரி அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தி பதிவு செய்ய முடியும் எனவும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் அவரது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

No comments: