ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து தப்பியோடியுள்ளார் என பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏஎவ்பி தெரிவித்துள்ளது
ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் நுழைந்துள்ள நிலையிலேயே ஜனாதிபதி அங்கிருந்து வெளியேறியுள்ளார் என ஏவ்பி பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி பாதுகாப்பாக அழைத்துச்செல்லப்பட்டார் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சீற்றத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றுவதை தடுப்பதற்காக படையினர் வானை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் எனவும் அவை குறிப்பிட்டுள்ளன.
கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரின் பாதுகாப்பு தடைகளை தகர்த்துக்கொண்டு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்தை நோக்கி முன்னேறினர்.
இலங்கை கொடி மற்றும் ஹெல்மெட்டுகளுடன் சில ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியின் இல்லத்திற்குள் நுழைந்தனர்.
ஜனாதிபதியின் இல்லத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அறைகள் வராந்தக்களில் காணப்படுவதையும் ஜனாதிபதிக்கு எதிராக கோசமிடுவதையும் முகநூல் நேரலைகள் காண்பித்துள்ளன.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காணப்படுகின்றனர் – பொலிஸாரும் படையினரும் அப்பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர்.
இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் காரணமாக 21 பேர் காயமடைந்த நிலையி;ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பில் ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதித் தடைகளை தகர்த்தெறிந்து ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவாயிலை அடைந்தனர்.இதேவேளை ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையில் போடப்பட்ட பொலிஸ் வீதித்தடைகளை தகர்த்தெறிந்து சென்ற வேளை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைத்து தடுப்பு வேலிகளையும் உடைத்தெறிந்து ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவாயிலை அடைந்தனர்.
மூன்று தடைகளை தாண்டி கண்ணீர்ப்புகை நீர்த்தாரை பிரயோகங்களை எதிர்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் சதாம் வீதி வழியாக ஜனாதிபதி மாளிகையின் பிரதான வாயிலை சென்றடைந்தனர்
No comments: