News Just In

7/17/2022 07:12:00 AM

ஆபிரிக்காவுக்கு 4719.47 கோடி நிதியுதவி ஒதுக்கீடு செய்த அமெரிக்கா!

அகதிகள் மற்றும் உள் நாட்டிலேயே புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை நடப்பு ஆண்டில் 10 கோடியை கடந்துள்ளது என்று ஐ.நா-வின்அகதிகளுக்கான தூதரகம் அதிர்ச்சியான தகவலை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ஆப்பிரிக்காவுக்கு மனித நேய அடிப்படையில் ரூபாய் 4719.47 கோடி நிதியுதவி ஒதுக்கீடு செய்யப்படும் என அமெரிக்காவின் சர்வதேச வளர்ச்சி மற்றும் வெளியுறவுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த நிதியுதவி அகதிகள், புலம் பெயர்ந்தவர்கள், உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள், நாடற்ற நபர்கள், கட்டாயத்தின் பேரில் புலம் பெயர்ந்தவர்கள் மற்றும் ஆப்பிரிக்கா முழுவதுமுள்ள துன்புறுத்தப்பட்ட மக்களுக்கான வாழ்க்கை பாதுகாப்புக்கான ஆதரவை வழங்கும் அடிப்படையில் இருக்கும்.

அத்துடன் இந்த நிதியுதவியானது சுகாதாரம், கல்வி, பாதுகாப்பு மற்றும் வருமானம் ஈட்டும் நடவடிக்கைகள் ஆகிய அத்தியாவசிய சேவைகளை ஆதரிக்கும் அடிப்படையிலும் அமையும்.

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா மேற்கொண்டுள்ள தாக்குதலால் ஏற்பட்ட விலைவாசி உயர்வால், அந்த நாட்டின் இறக்குமதியை நம்பியுள்ள பல நாடுகளும் அதிர்ச்சியில் தள்ளப்பட்டது. இது போன்ற விசயங்களை கவனத்தில்கொண்டு சர்வதேச கவனம் குறைந்து போயுள்ள உகாண்டா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளுக்கு மனித நேய நெருக்கடி சார்ந்த உதவிகளை வழங்க அமெரிக்கா முடிவுசெய்துள்ளது.


அதில் காங்கோ ஜனநாயக குடியரசு மற்றும் தெற்று சூடானிலிருந்து நடப்பு ஆண்டில் உகாண்டாவுக்கு அகதிகளாக 71 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்த வருகை அதிகரித்து வரும் சூழ்நிலையில், நிதியுதவி அளிக்கும் முடிவை அமெரிக்கா அறிவித்திருப்பது ஆறுதல் ஏற்படுத்தி இருக்கிறது.

No comments: