News Just In

7/07/2022 05:30:00 PM

தமிழ் மாற்றுத் திறனாளிகள் விளையாட்டு விழா 2022 - ஊடகவியலாளர் சந்திப்பு!!

இலங்கையின் இக்கட்டான இந்த சூழ்நிலையில் மீண்டும் மாற்றுத்திறனாளிகளை பேசு பொருளாக்கும் நோக்கோடு மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு விழா இவ்வருடம் 2022 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் நடாத்தப்படவுள்ளதாக இன்று மட்டக்களப்பில் டேட்டா சரிட்டி நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக குறித்த ஊடக சந்திப்பில் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

டேட்டா சரிட்டி ( DATA Charity ), மட்டக்களப்பு மாற்றுத்திறனாளிகள் சம்மேளனம் ஆகியன இணைந்து நடாத்தும் இந்த விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாணத்தில் இருந்து திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் இருந்து 1000 இற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ளவுள்ள இந்த விளையாட்டு விழாவுக்கு பிரதான அனுசரணையை அபி டயமன்ட், ராஜ் கிளஸ்டர் மற்றும் லிங்க்ஸ் லீகல் ஆகிய தொண்டு நிறுவனத்தினர் வழங்கவுள்ளனர்.

மட்டக்களப்பில் இருந்து 26 மாற்றுதிறனாளிகள் அமைப்புகளும் , அம்பாறையில் இருந்து 08 மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்களும், திருகோணமலையில் இருந்து 04 மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்களும் இந்த விளையாட்டு விழாவில் கலந்து கொள்ளவுள்ளனர்.

போரினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் மாற்றுத்திறனாளிகளின் அடிப்படைத்தேவையாக உள்ள அனைத்து வசதிகளும் கொண்ட பராமரிப்பு நிலையம் உருவாக்க அனைவரும் இணைந்து உதவிடவேன்டும் என்ற பரப்புரையை இந்த ஆண்டு விளையாட்டு விழாவில் நாம் முன்வைக்கின்றோம்.

தமிழ் பரா விளையாட்டு விழாவானது 2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து 2017,2018 ஆகிய ஆண்டுகளில் வடக்கு மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் மிக பிரமாண்டமாக நடாத்தப்பட்டது .

அதன் தொடர்ச்சியாக 2020 ஆம் ஆண்டு விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்கு இருந்தன கொவிட் பரவல் காரணமாக இடையில் நிறுத்தப்பட்டு ,இப்போது மீண்டும் மட்டக்களப்பில் நடைபெறுகின்றன.

தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் இந்த விளையாட்டு போட்டியின் முதல் அங்கமாக பார்வை இழந்தவர்களுக்கான சத்த பந்து கிரிக்கட் போட்டி இடம்பெறவுள்ளது . இந்த போட்டியில் மட்டக்களப்பை தளமாக கொண்டியங்கும் உதயம் விழிப்புலனிழந்தோர் சங்கத்தினரும், யாழ் விழிப்புலனிழந்தோர் சங்கத்தினரும் பங்கு பற்றுகின்றனர்.

இந்த விளையாட்டு விழாவிற்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களம் , விளையாட்டு திணைக்களம் உட்பட பல அரச திணைக்களங்கள் உதவி புரிகின்றன. அவர்களுக்கும் எமது DATA charity நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.


ஹமீட் நிறுவனத்தின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.அருள்மொழி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவர் கே.ஜீவராஜா, டேட்டா அமைப்பின் பணிப்பாளர் ரீ.விநாயகமூர்த்தி, கமீட் திட்ட பணிப்பாளர் கே.காண்டீபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு இடம்பெறவுள்ள தமிழ் பரா விளையாட்டு விழா தொடர்பாகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் எதிர்நோக்கும் இடர்பாடுகள் தொடர்பாகவும் தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: