News Just In

6/08/2022 12:55:00 PM

சிங்கப்பூர், இந்தியாவை பின்பற்றி இலங்கையின் கல்விமுறையில் மாற்றம்! வடக்கு கிழக்கில் ஆசிரியர் வெற்றிடங்கள்!




இலங்கையின் கல்வி முறையில், சிங்கப்பூர் மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் கல்வி முறையை பின்பற்றி மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரட்ன கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், இதனை குறிப்பிட்டார்.சர்வதேச ஓட்டத்துக்கு ஏற்ப இலங்கையின் கல்வி முறை இல்லையென்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே இது தொடர்பில் நாடாளுமன்ற மேற்பார்வை குழு அமைக்கப்பட்டு கல்விமுறையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்று கல்வியமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை இலங்கையின் 396 தேசியப்பாடசாலைகளும் 9590 மாகாண பாடசாலைகளும் இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.தேசியப் பாடசாலைகளை பொறுத்த வரையில் தமிழ் மொழி ஆசிரியர்கள் மத்தியில் 117 வெற்றிடங்கள் உள்ளன.

சிங்களம் மற்றும் ஆங்கில ஆசிரியர்கள் மத்தியில் மேலதிக ஆசிரியர்கள் உள்ளனர். மாகாண பாடசாலைகளை பொறுத்த வரையில் தென் மாகாணத்தில் 421 ஆசிரியர்கள் மேலதிகமாக உள்ளனர்.

சப்ரகமுவ மாகாணத்தில் 224 மேலதிக ஆசிரியர்கள் உள்ளனர்.

மத்திய மாகாணத்தில் 114மேலதிக ஆசிரியர்கள் உள்ளனர்.

வடமேல் மாகாணத்தில் 2383 வெற்றிடங்கள் உள்ளன.

வடக்கு மாகாணத்தில் 1560 வெற்றிடங்கள் உள்ளன.

மேல் மாகாணத்தில் 1188 வெற்றிடங்கள் உள்ளன.

ஊவா மாகாணத்தில் 900 வெற்றிடங்கள் உள்ளன.

கிழக்கு மாகாணத்தில் 2618 வெற்றிடங்கள் உள்ளதாக கல்வியமைச்சர் குறிப்பிட்டார்.


No comments: