News Just In

6/27/2022 12:35:00 PM

எந்த வித வேறுபாடுகளும் இல்லாமல் எதிர்கால அபிவிருத்தியும் இடம்பெறும் ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்புத் தொகுதி அமைப்பாளர் தயானந்தன்




-- ஏ.எச்.ஏ. ஹுஸைன்

எந்த வித வேறுபாடுகளும் இல்லாமல் எதிர்கால அபிவிருத்தியும் இடம்பெறும் என மண்முனைப்பற்று பிரதேச சபையின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்புத் தொகுதி பிரதான அமைப்பாளருமான தருமரெட்ணம் தயானந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கிரான்குளம் பிரதேசத்தில் ஞாயிற்றுகச்கிழமை மாலை 26.06.2022 இடம்பெற்ற மக்கள் விழிப்புணர்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.

அங்கு பிரதேச மக்கள், சமூக செயற்பாட்டாளர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் மத்தியில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், கடந்த காலத்தில் நாம் முன்னெடுத்தது போலவே எதிர்காலத்தில் ஒவ்வொரு கிராமத்திற்கும் எந்த வித வேறுபாடுகளுமின்றி அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரின் சஜித் பிறேமதாஸ அவர்களின் வழி நடத்திலின் கீழ் எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டம் எந்த வித வேறுபாடுமில்லாமல் அனைத்துக் கிராமங்களிலும் அனைத்துவித அபிவிருத்திகளும் இடம்பெறும்.

இதற்கு கட்சி வேறுபாடுகளை மறந்து அனைவரும் அபிவிருத்திக்காக ஐக்கிய மக்கள் சக்தியோடு கைகோர்க்க வேண்டும். தற்போதிருக்கும் இந்த அரசாங்கம் ஸ்திரமற்றது. எதிர்காலத்தில் சஜித் பிறேமதாஸ அவர்களின் தலைமையின் கீழ் இந்த நாடு அபிவிருத்திப் பாதையில் பயணிக்கும்போது அதில் மட்டக்களப்பு மக்களும் பங்கெடுக்க வேண்டும்” என்றார்.

இந்நிகழ்வில் பிரதேச விளையாட்டுக் கழகங்களின் உறுப்பினர்கள் பிரதேச சபைத் தலைவரிடம் தமது தேவைகள் அடங்கிய வேண்டுகோள் மகஜரைக் கையளித்தனர்.


No comments: