News Just In

1/11/2022 06:17:00 AM

தேசிய மட்ட கபடி சுற்றுப்போட்டியில் நிந்தவூர் அல்-மதினா விளையாட்டுக்கழக கபடி அணியினர் வரலாற்றுச் சாதனை!

இலங்கை தேசிய கபடி சம்மேளனத்தினால் மாவட்ட மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட அணிகளுக்கு இடையிலான தேசிய மட்ட கபடி சுற்றுப்போட்டி இம்மாதம் 08, 09 மற்றும் 10 ந் திகதிகளில் கொழும்பு டொரிங்டன் உள்ளக விளையாட்டரங்கில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

இப்போட்டியில் அம்பாறை மாவட்டம் சார்பாக பங்குபற்றிய நிந்தவூர் அல்-மதினா விளையாட்டுக்கழகத்தின் கபடி அணியினருடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட அணியும் தேசிய மட்டத்திலான இறுதிப்போட்டிக்கு தெரிவாகினர். இந்த போட்டியில் அதிகூடிய புள்ளிகளை பெற்று தேசிய மட்ட சம்பியனாக இந்த வருடத்தின் முதலாவது வரலாற்று சாதனையை நிந்தவூர் அல்-மதினா விளையாட்டுக் கழகத்தின் கபடி அணியினர் பெற்றுள்ளதோடு அம்பாறை மாவட்டத்திற்கும் நிந்தவூர் பிரதேசத்திற்கும் பெருமை ஈட்டிக் கொடுத்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் இந்த சுற்றுப்போட்டியின் சிறந்த வீரராக இலங்கை தேசிய கபடி அணி வீரரும் நிந்தவூர் அல்-மதினா விளையாட்டுக்கழக வீரருமான எம் ரீ அஸ்லம் சஜா தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு வெற்றி பெற்ற வீரர்களுக்கு சம்பியன் கேடயத்துடன் சான்றிதழ் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணப்பரிசு என்பன இலங்கை தேசிய கபடி சம்மேளனத்தின் தலைவர் அனுர பத்திரனவினால் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நூருல் ஹுதா உமர்

No comments: