கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹா ஷரீபின் 200 வது வருட கொடியேற்று விழா கொடியிறக்கத்துடன் ஞாயிற்றுக்கிழமை (16) மாலை நிறைவு பெற்றது. கொடியிறக்கும் தினமான அன்று விஷேட துஆ பிராத்தனையுடன் சகல மினாரக்களிலும் ஏற்றப்பட்ட கொடிகள் இறக்கி வைக்கப்பட்டது.
கல்முனை பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ் தலைமையில் கடந்த (04) அன்று அரசியல் பிரமுகர்கள், அரச அதிகாரிகளின் பிரசன்னத்துடன் கொடியேற்றம் ஆரம்பமாகி கடந்த 12 தினங்களாக மௌலிதுகளுடன் இவ்விழா இடம்பெற்று வந்ததுடன் நினைவு முத்திரையும் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொடி இறக்கும் இந்நிகழ்வில் மெளலித் ஷரீப் பாராயணம், மற்றும் குறிப்பாக நாட்டில் கொரானா தொற்றில் இருந்து முழுமையாக விடுபட வேண்டி விசேட துஆ பிராத்தனை இடம்பெற்றதுடன் சுமார் 5000 பேரளவிலானவர்களுக்கு கந்தூரியும் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் உலமாக்கள், சுகாதாரதுறையினர், பள்ளிவாசல் நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
(நூருல் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ்)
No comments: