News Just In

11/20/2021 07:43:00 PM

பசில் ராஜபக்சவை, நிதியமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குமாறு கோரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்!

பசில் ராஜபக்சவை, நிதியமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குமாறு கோரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் உடன்படிக்கையில் கையெழுத்திட்டமை காரணமாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இலங்கையர்களுக்கு சொந்தமான சொத்துக்களை வெளிநாடுகளுக்கு வழங்கும் எவ்வித உரிமையும் அமெரிக்க பிரஜையான பசில் ராஜபக்சவுக்கு இல்லை என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச ( Wijayadasa Rajapaksa) தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவருக்கு நிதியமைச்சர் பதவியை மாத்திரமல்லாது நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கவும் உரிமையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே விஜயதாச ராஜபக்ச இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், அமெரிக்க நிறுவனம், அமெரிக்க பிரஜைகளை அச்சுறுத்தி, நடு இரவில் உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளது. இந்த உடன்படிக்கை நடைமுறைப்படுத்தப்படுவதை தடுக்க உச்ச அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்.

தற்போதைய அரசாங்கத்தின் பல செயற்பாடுகள் சிக்கலுக்குரியவை. புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்பாடுகளும் எந்த வகையிலும் பொருத்தமற்றவை.

புதிய அரசியலமைப்புச் சட்டவரைவை உருவாக்கும் முழு அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உள்ளது. நாடாளுமன்றத்திற்கு வெளியில் சட்டத்தரணிகள் குழு ஒன்று உருவாக்கும் ஆவணத்திற்கு ஆதரவாக கைகளை உயர்த்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாரில்லை.

புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதாக கூறி அரசாங்கம் ஒரு மாயையை ஏற்படுத்தி வருகிறது. தற்போதைய அரசாங்கத்தின் கீழ் புதிய அரசியலமைப்புச் சட்டம் எந்த வகையிலும் நிறைவேற்றப்படமாட்டாது எனவும் விஜயதாச ராஜபக்ச உறுதியாக கூறியுள்ளார்.

No comments: