News Just In

11/07/2021 06:29:00 AM

தென் ஆபிரிக்காவின் துரதிஷ்டம் தொடர்கின்றது! இங்கிலாந்தை வீழ்த்தியும் அரை இறுதி வாய்ப்பை இழந்தது!

இங்கிலாந்துக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையில் ஷார்ஜாவில் நேற்று (06) ஞாயிற்றுக்கிழமை பரபரப்புக்கு மethதியில் நிறைவுபெற்ற குழு 01 க்கான கடைசி இருபது 20 உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்று லீக் போட்டியில் தென் ஆபிரிக்கா 10 ஓட்டங்களால் வெற்றிபெற்றபோதிலும் அரை இறுதி வாய்ப்பை இழந்தது. கெகிசோ ரபாடா போட்டியின் கடைசி ஓவரில் ஹெட்-ட்ரிக்கைப் பதிவு செய்தார். ஆனால் அவரது முயற்சியும் பலனற்றுப் போனது.

இந்த வருட இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கேர்ட்டிஸ் கெம்ப்வர், வனிந்த ஹசரங்க ஆகியோரைத் தொடர்ந்து ஹெட்-ட்ரிக்கை பதிவு செய்த 3ஆவது பந்துவீச்சாளர் கெகிசோ ரபாடா ஆவார். இப் போட்டிக்கு முன்பதாக தென் ஆபிரிக்கா 160 ஓட்டங்களுக்கு மேல் பெற்று இங்கிலாந்தை 100 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தினால் தென் ஆபிரிக்கா அரை இறுதி வாய்ப்பைப் பெறும் என எதிர்வு கூறப்பட்டது. ஆனால், துரதிர்ஷ்டவசமான அணி என பெயர்பெற்ற தென் ஆபிரிக்காவுக்கு இந்த வருட இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட்டிலும் அதிர்ஷ்டம் கைகொடுக்கவில்லை. தென் ஆபிரிக்காவுடனான இன்றைய போட்டியில் 87ஆவது ஓட்டத்தைப் பெற்றதும் இங்கிலாந்து அரை இறுதியில் விளையாடுவது உறுதி செய்யப்பட்டது. அத்துடன் இங்கிலாந்து 137 ஒட்டங்களைப் பெற்றபோது தென் ஆபிரிக்காவின் அரை இறுதி வாய்ப்பு அற்றுப்போய் அவுஸ்திரேலியா அரை இறுதிக்குள் நுழைந்தது.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட தென் ஆபிரிக்கா, ரெசி வென் டேர் டுசென், ஏய்டன் மார்க்ராம் ஆகியோரின் அதிரடி துடுப்பாட்ட உதவியுடன் 20 ஓவர்களில 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 189 ஓட்டங்களைக் குவித்தது.ஆரம்ப வீரர்களில் ஒருவரான ரீஸா ஹெண்ட்றிக்ஸ் (2) 3ஆவது ஓவரில் ஆட்டமிழந்தபோது தென் ஆபிரிக்காவின் மொத்த எண்ணிக்கை 15 ஓட்டங்களாக இருந்தது.

மற்றைய ஆரம்ப வீரர் குவின்டன் டி கொக்குடன் ஜோடி சேர்ந்த ரெசி வென் டேர் டுசென் 71 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது டி கொக் 34 ஓட்டங்களுடன் வெளியேறினார்.12ஆவது ஓவரின் 2ஆவது பந்தில் டி கொக் ஆட்டமிழந்தபோது தென் ஆபிரிக்காவின் மொத்த எண்ணிக்கை 86 ஓட்டங்களாக இருந்தது.

அதன் பின்னர் ஜோடி சேர்ந்த வென் டேர் டுசெனும் மார்க்ராமும் அதிரடி துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி 52 பந்துகளில் 103 ஓட்டங்களைப் பகிர்ந்து தென் ஆபிரிக்காவின் மொத்த எண்ணிக்கையை 189 ஓட்டங்களாக உயர்த்தினர்.ரெசி வென் டேர் டுசென் 60 பந்துகளில் 6 சிக்ஸ்கள், 5 பவுண்ட்றிகளுடன் ஆட்டமிழக்காமல் 94 ஓட்டங்களையும் ஏய்டன் மார்க்ராம் 25 பந்துகளில் 4 சிக்ஸ்கள். 2 பவுண்ட்றிகளுடன் ஆட்டமிழக்காமல் 52 ஓட்டங்களையும் குவித்தனர்.

கடினமான ஆனால் எட்டக்கூடிய 190 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 20 ஓவர்களில் 8விக்கெட்களை இழந்து 179 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.இங்கிலாந்து 4.1 ஓவர்களில் 31 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஜேசன் ரோய் தசை பிடிப்புக்குள்ளானதால் ஒய்வுபெற நேரிட்டது. அவர் ஓய்வு பெற்றபோது 20 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

6ஆவது ஓவரில் ஜொஸ் பட்லரும் (26), 7ஆவது ஓவரில் ஜொனி பெயார்ஸ்டோவும் (1) அடுத்தடுத்து ஆட்டமிழந்தமை இங்கிலாந்தை நெருக்கடிக்குள்ளாக்கியது.எனினும் டேவிட் மாலனும் மொயின் அலியும் ஜோடி சேர்ந்து மொத்த எண்ணிக்கையை 87 ஓட்டங்களாக உயர்த்திபோது இங்கிலாந்து அரை இறுதியில் விளையாடுவது உறுதிசெய்யப்பட்டது. இவர்கள் இருவரும் 3ஆவது விக்கெட்டில் 51 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது மொயின் அலி 37 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.தொடர்ந்து டேவிட் மாலன், லியாம் லிவிங்ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் அதிரடியாக ஓட்டங்களைக் குவித்தபோதிலும் இங்கிலாந்தினால் வெற்றிபெறமுடியாமல் போனது.

மாலன் 26 பந்துகளில் 33 ஓட்டங்களையும் லிவிங்ஸ்டோன் 17 பந்துகளில் 28 ஓட்டங்களையும் ஒய்ன் மோர்கன் 12 பந்துகளில் 17 ஓட்டங்களையும் விளாசினர்.ஆனால் கடைசி ஓவரின் முதல் மூன்று பந்துகளில் கிறிஸ் வோக்ஸ், ஒய்ன் மோர்கன், கிறிஸ் ஜோர்டான் ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்து ஹெட்-ட்ரிக்கை பதிவு செய்த கெகிசோ ரபாடா, இருபது 20 உலகக் கிண்ணத்திலிருந்து தென் ஆபிரிக்காiவா வெற்றியுடன் விடைபெறச் செய்தார்.

பந்துவீச்சில் ரபாடா 48 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் தப்ரெய்ஸ் ஷம்சி 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

No comments: