News Just In

9/01/2021 05:58:00 PM

சுபோதினி அறிக்கையினை நடைமுறைப்படுத்துவதாக அறிவிக்கும் வரை போராட்டம் ஓய்வடையாது...!!


(நூருள் ஹுதா உமர்)
ஆசிரியர், அதிபர்களின் போராட்டங்களின் நியாயப்பாடுகளை முழுமையாக விளங்கிக் கொண்டும் அரசு இழுத்தடிப்புச் செய்வதை நாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. சுபோதினி அறிக்கையினை நடைமுறைப்படுத்துவதாக அறிவிக்கும் வரை நமது போராட்டம் ஓய்வடையாது என இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள விஷேட அறிக்கையில் தெரிவித்துள்ளது

அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் அமைச்சரவை இணைக்குழு வெளியிட்டுள்ள தீர்மானங்கள் தொடர்பில் ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள விஷேட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜெஸ்மி எம். மூஸா: செயலாளர் எம்.கே.எம். நியார் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அதிபர், ஆசிரியர் சேவையை வரைவிடப்பட்ட சேவையாக அமைச்சரவை அறிவித்துள்ளமைக்கு நாம் நன்றி தெரிவிக்கின்றோம். எனினும் கூட்டிணைந்த தொழிற்சங்கங்கள் கடந்த இரு மாதங்களாக மேற்கொண்டு வரும் போராட்டத்திற்கான ஏற்றுக் கொள்ளத்தக்க தீர்வொன்றை முன்வைக்க வேண்டுமென்றே நாம் எதிர்பார்த்தோம்.

5000 ரூபா இடைக்காலக் கொடுப்பனவோ அமைச்சரவை தீர்மானித்த சம்பளத் தொகையை நான்கு கட்டங்களாக வழங்குவதோ எமது போராட்டங்களுக்குத் தீர்வாகாது. யானைப் பசிக்கு சோளப் பொரிபோல் கண் துடைப்பு வேலையொன்றையே அமைச்சரவை உப குழு அறிவித்துள்ளது. இதனை தொழிற்சங்கம் என்ற ரீதியில் நாம் வன்மையாக நிராகரிக்கின்றோம்.

2018 ஆம் ஆண்டு கல்வியமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட சம்பள அறிக்கையில் உள்ள விடயங்களே அமைச்சரவை உப குழுவும் அறிவித்துள்ளது. இவ்வாறான அறிவிப்புக்கு சம்பள முரண்பாடு தீர்க்கும் முன்னெடுப்பு என்ற மாயை தேவையில்லை. சுபோதினி சம்பள முரண்பாட்டு அறிக்கையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயங்களே தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் எனத் தெரிந்திருந்தும் அதன் நியாயப்பாடுகளை விளங்கியும் கண்மூடித்தனமான அறிவிப்பொன்றை அமைச்சரவை உப குழு விடுத்திருப்பதனை ஏமாற்று வேலையாகவே பார்க்க வேண்டியுள்ளது.

மாணவர் சமூகத்திற்கான ஆசிரியர் தேவைப்பாடுகள் உள்ள தீர்க்கமான கால கட்டத்தில் இருந்தும் மாணவர் சமூகத்தின் மீது கவலையற்ற நிலையில் தொடர்ந்தும் அமைச்சரவை உப குழு தீர்மானத்திற்கு வந்திருப்பது குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளன.

அமைச்சரவை உப குழுவின் அறிக்கையினை பிரபல்யப்படுத்தி எமது போராட்டங்கள் நிறைவடைந்து விட்டதான மாயை ஒன்றை ஆசிரியர்கள் மத்தியில் ஏற்படுத்த சிலர் முயற்சித்து வருகின்னர். இவ்வாறான விடங்கள் மீது ஆசிரியர் சமூகம் விளிப்பாக இருக்க வேண்டும். எமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டங்கள் தொடரும். கூட்டிணைந்த தொழிற்சங்கங்களின் உத்தியோக பூர்வ அறிவிப்புவரும் வரை தொடர்ந்தும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அனைவரினதும் கடப்பாடாகும்.

தொழிற் சங்கங்களின் பிரதி நிதிகள் ஆசிரியர் சமூகத்தின் விடிவுக்காக இரவு, பகல் பாராது செயற்படுவதை ஆசிரியர்களாகிய நாம் உணர வேண்டும். இது தனிப்பட்ட பிரச்சினையல்ல. கூட்டிணைந்த முன்னெடுப்பு. இவையெல்லாம் நமக்காகவே. இவ்விடயத்தில் சகல அதிபர், ஆசிரியர்களும் இதய சுத்தியுடன் புரிந்து கொண்டு தற்போது வழங்கி வரும் ஆதரவைத் தொடர்ந்தும் வழங்க முன்வர வேண்டுமென்றும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்ட்டுள்ளது

No comments: