News Just In

8/05/2021 08:05:00 AM

கிழக்கு மாகாணத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தமிழ்மொழிக்கும் உரிய இடம் வழங்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை!!


(எப்.முபாரக்)
கிழக்கு மாகாணத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தமிழ்மொழிக்கும் உரிய இடம் வழங்குமாறு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யகம்பத்திடம் இன்று(4) கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆளுநருக்கு இது தொடர்பில் அவர் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் மூன்று இன மக்களும் வாழ்கின்றார்கள் என்பதையும் இதில் 75 வீதத்திற்கும் மேற்பட்டவர்கள் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களாவர்.

இந்த நிலையில் கிழக்கு மாகாண உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பல விடயங்கள் சிங்கள மொழியில் மட்டுமே பதிவேற்றப் படுகின்றன. குறிப்பாக ஆளுநர் சம்பந்தப்பட்ட சகல தகவல்களும் சிங்கள மொழியிலேயே பதிவேற்றப்படுகின்றன.

இதனால் தமிழ்மொழி பேசுபவர்களால் இந்தத் தகவல்களை விளங்கிக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தில் தமிழ்மொழிக்கும் உரிய அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் முன்னைய ஆளுநர்கள் காலத்தில் தமிழ்மொழி அமுலாக்கம் திருப்திகரமான நிலையிலிருந்தது. எனினும் தற்போதைய நிர்வாக காலத்தில் இந்த விடயத்தில் புறக்கணிப்பு காட்டப்படுகிறது.

எனவே இந்த விடயத்தில் விசேட கவனம் செலுத்தி கிழக்கு மாகாண உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தமிழ்மொழிக்கும் உரிய அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்குமாறு இம்ரான் மஹ்ரூப் ஆளுநரிடம் கோரியுள்ளார்.

No comments: