News Just In

6/29/2021 08:23:00 PM

கொரோனா பாதிப்பு ஆன்மீகத்தையும் முடக்கியுள்ளது; பொருளாதாரம் மற்றும் கல்வியையும் மீட்டெடுக்க வேண்டும்- ஏறாவூர் நகர சபை அமர்வில் தெரிவிப்பு...!!


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
கொரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு ஒட்டு மாத்தமாக அனைத்தையும் முடக்கியுள்ளதாக ஏறாவூர் நகர சபையின் தலைவர் எம்.எஸ். நழீம் தெரிவித்தார்.

அச்சபையின் 39வது மாதாந்த அமர்வு செவ்வாய்க்கிழமை (2021.06.29) நகரசபை சபா மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் தொடர்ந்து தலைமை உரையாற்றிய தவிசாளர் நழீம் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அதிவேகமாக பரவி வரும் நிலையில் அதன் தாக்கம் ஏறாவூர் நகர பிரதேசத்தையும் விட்டு வைக்கவில்லை.

பொருளாதாரம் வாழ்வாதாரம் கல்வி சுகாதாரம் என்பனவற்றோடு ஆன்மீக வணக்க வழிபாடுகளையும் முடக்கியுள்ளது.

இதனால் மக்கள் பல்வேறு சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.

பயணக்கட்டுப்பாடு அன்றாட இடம்பெயர் கூலித் தொழிலாள மக்களின் வாழ்வாதாரத்தை அடியோடு புரட்டிப் போட்டுள்ளது.

எமது பிரதேசத்தில் கொவிட் மரணங்கள் நிகழ்வதையும், தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரிப்பதையும் வைத்து பொதுமக்கள் இத்தருணத்தில் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைபிடிக்க வேண்டும்.

பிரதேச கொரோனா வைரஸ் தடுப்பு செயலணியின் தீர்மானங்களுக்கு அமைவாக கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு நகர சபையால் ஆக்கபூர்வமான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதேவேளை பல்வேறு பகீரதப் பிரயத்தனங்களின் ஊடாக பொதுமக்களுக்கான சேவைகளையும் நிவாரணங்களையும் வழங்கி வருகின்றோம்.

பயணக்கட்டுப்பாடு காலங்களில் பொதுமக்களின் வீடுகளுக்கு பொருட்கள் கொண்டு செல்வதற்கு நடமாடும் விற்பனை முறைமைகளை அனுமதித்து முறையாக ஒழுங்கமைக்கப்பட்டு இடம்பெற்று வருகின்றது.

நாம் எமது குடும்பத்தாரைக் கவனிப்பது போல இரவு பகல் பாராது இந்த நகர பிரதேச மக்களைக் கவனித்து சேவையாற்றி வருகின்றோம்.

இதேவேளை சில சுய நலமிகள் முகநூல்கள் வாயிலாக எமது செயற்பாடுகளை மலினப்படுத்தி அவதூறு பரப்பி வருகின்றனர். இத்தகைய விஷமிகளின் தீய நோக்கங்களை மக்கள் இனம் கண்டுள்ளார்கள். இந்த இக்கட்டான காலகட்டத்திலும் தீயவர்களின் அவதூறுகளை கருத்திலெடுக்காது சேவையைத் தொடர வேண்டும் என எனது சக உறுப்பினர்களாகிய நீங்கள் என்னைக் கேட்டுக் கொண்டிருப்பது எனக்கு ஊக்கமளிக்கிறது” என்றார்.






No comments: