பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளும் போது, அதனைப் படம் பிடித்து பேஸ்புக்கில் பதிவிடுவதால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்குட்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர்.பரிசோதனையின் போதே இவ்வாறான அசௌகரியங்களை எதிர்நோக்கியதாக பி.சி.ஆர்.எடுத்துக் கொண்ட நபர்கள் தெரிவிக்கின்றனர்.
சிறுவர்கள், பெண்கள் உட்பட அனைவரினதும் படங்களை இவ்வாறு பேஸ்புக்கில் பதிவிடுவதால், ஏனையோர் தொலைபேசி எடுத்து தங்களின் புகைப்படங்களை செய்தித் தளங்களில் பார்ப்பதாக தெரிவிக்கின்றனர்.
இதனால், தாம் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாவதாக தெரிவிக்கும் நபர்கள், பி.சி.ஆர்.பரிசோதனையின் போது கொரோனா தொற்று இல்லை என்று முடிவு கிடைத்த போதும், புகைப்படங்களைப் பார்ப்போர் விவரம் தெரியாமல் தங்களை கொரோனா தொற்றுள்ளார்கள் என நினைத்து நடந்து கொள்வதாகவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
எனவே, இவ்வாறான செயற்பாடுகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் எடுத்து, பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளும் போது, நபர்களை அடையாளம் காணும் வகையில் புகைப்படங்களை எடுப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
No comments: