News Just In

5/21/2021 05:39:00 PM

திருகோணமலையில் கடந்த 24 மணி நேரத்தில் 215 பேருக்கு கொரோனா தொற்று- மூன்று பேர் உயிரிழப்பு...!!


திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 215 தொற்றாளர்களும், கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் மூன்று மரணங்கள் சம்பவித்துள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்தார்.

திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகத்தினால் இன்று (21) ஆம் திகதி காலை 10 மணியளவில் வெளியிடப்பட்ட
அறிக்கை ஒன்றிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 272 பேருக்கு கடந்த 17, 18ஆம் திகதிகளில் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் 81 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 26 பேர் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வருபவர்கள் எனவும் தெரியவருகின்றது.

இதேவேளை உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள பூம்புகார் பகுதியில் 65 பேருக்கு பெறப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 65 பேருக்கும் தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் மூதூர் பிரதேசத்தில் 23 பேருக்கும் குறிஞ்சாங்கேணி சுகாதார வைத்திய பிரிவில் 16 பேருக்கும், கிண்ணியாவில் ஆறு பேருக்கும், குச்சவெளி பிரதேசத்தில் பத்து பேருக்கும், கோமரங்கடவல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள ரொட்டவெவ கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கும், பதவிசிறிபுர பிரதேசத்தில் 6 பேரும் தம்பலகாமத்தில் இருவரும் இனங் காணப்பட்டுள்ளதாகவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் குறிப்பிட்டார்.

இதேவேளை நோய் அறிகுறிகள் தென்பட்டால் பொதுமக்கள் உடனடியாக பரிசோதனைக்கு முன்வரவேண்டும் எனவும் எவரும் தங்களுக்கு ஏற்ற விதத்தில் மருந்துகளை பாவிக்க வேண்டாம் எனவும் வைத்திய ஆலோசனையை பின்பற்றி நடக்குமாறும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் கோரிக்கை விடுத்துள்ளது.

No comments: