News Just In

8/01/2026 03:27:00 PM

ரவி செனவிரத்னவுக்கும் ஷானி அபேசேகரவுக்கும் கூட மரண தண்டனை வழங்கப்பட முடியும் - உதய கம்மன்பில

ரவி செனவிரத்னவுக்கும் ஷானி அபேசேகரவுக்கும் கூட மரண தண்டனை வழங்கப்பட முடியும் - உதய கம்மன்பில


திட்டமிட்டே உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை நடத்துவதற்கு வழிவகுத்த குற்றத்துக்காக, ரவி செனவிரத்னவுக்கும் ஷானி அபேசேகரவுக்கும் கூட மரண தண்டனை வழங்கப்பட முடியும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

முன்னாள் காவல்துறை மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பின்னணியில், ஊடகச் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார்.

“ஸஹ்ரான் ஹாஷிம் பயங்கரவாதத் தாக்குதலை நடத்தப்போவதாகக் கிடைக்கும் தகவல்களைப் புலனாய்வுப் பிரிவுகள் பாதுகாப்புச் செயலாளருக்கும் காவல்துறை மாஅதிபருக்கும் அறிவித்திருந்தாலும், அவர்கள் உடனடியாகக் கலவரமடையத் தேவையில்லை; ஏனெனில் அந்த இருவரும் ஸஹ்ரான் ஹாஷிம் என்பவர் யார் என்பது பற்றிய சரியான புரிதல் இல்லாதவர்களாக இருந்தனர்.

ஆனால், ஸஹ்ரான் ஹாஷிம் ஒரு தாக்குதலுக்குத் தயாராகி வருகிறார் என்றவுடன் உடனடியாகக் கலவரமடைந்திருக்க வேண்டிய இருவர் காவல்துறையில் இருந்தனர். அவர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பான அப்போதைய சிரேஷ்ட பிரதி காவல்துறை மாஅதிபர் ரவி செனவிரத்ன மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர ஆகியோர் ஆவர்.

அப்போது அவர்கள் ஸஹ்ரான் ஹாஷிம் தொடர்பான பல விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

வவுணதீவு காவல்துறை அதிகாரிகளின் மரணம், மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு விவகாரம், வண்ணாத்திவில்லுப் பகுதியில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டமை, மட்டக்களப்பு பாலமுனை உந்துருளி குண்டுப் பரிசோதனை உள்ளிட்ட நான்கு குற்றச் செயல்களின் விசாரணைகளையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களமே மேற்கொண்டது.

மாவனெல்லை புத்தர் சிலை உடைப்புச் சம்பவம் தொடர்பிலும், புத்தளம் வண்ணாத்திவில்லுப் பகுதியில் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்டவர்கள் மூலமாகவும், ஸஹ்ரான் ஹாஷிம் ஒரு பெரிய பயங்கரவாதத் தாக்குதலை நடத்தத் தயாராகி வருவதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அங்கு கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருட்களை பார்க்கும்போது, இவற்றினால் 100 வெடிகுண்டுகளை வெடிக்க வைக்க முடியும் என எந்தவொரு காவல்துறை அதிகாரியினாலும் அறிந்துகொள்ள முடியும்.

எனவே, ஸஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான குழுவினர்தான் இந்தச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதை அறிந்துகொண்ட பிறகும், அதனைத் தடுத்து நிறுத்தாமல், ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோர், பாதுகாப்புச் செயலாளரை மற்றும் காவல்துறை மாஅதிபரை விடத் தெளிவாகவே இந்தத் தாக்குதலுக்குப் பின்னணி அமைத்துக் கொடுக்கும் வகையில் பொறுப்புமீறிச் செயற்பட்டுள்ளனர்.

கவனக்குறைவை விட வேண்டுமென்றே திட்டமிட்டு, ஸஹ்ரானுக்குத் தாக்குதலை நடத்தத் தேவையான சூழலை ஷானி அபேசேகர உருவாக்கிக் கொடுத்தார் என 'பிரதானி சூத்திரதாரி' தொடர்பான எனது புத்தகத்தில் சாட்சிகளுடன் 11 குற்றச்சாட்டுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

ஏப்ரல் 21 ஆம் திகதி பயங்கரவாதத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட உள்ளதாக அப்போதைய சிரேஷ்ட பிரதி காவல்துறை மாஅதிபர் ரவி செனவிரத்ன தமக்கு அறிவித்திருந்த போதிலும், அது குறித்து விசாரணைக் குழுவுக்கு அறிவித்து ஸஹ்ரானைக் கைது செய்வதற்கு உடனடியாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் ஷானி அபேசேகர மீது சுமத்தப்பட்டுள்ளது.

எனவே, முன்னாள் காவல்துறை மாஅதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை விடவும் மிகவும் பெரிய தவறைப் புரிந்துள்ள ரவி செனவிரத்னவுக்கும் ஷானி அபேசேகரவுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட முடியும்.

அன்றைய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தலைவராக ஷானி அபேசேகர கடமையாற்றித் தனது கடமையைப் புறக்கணித்தார். பொதுவாக உலகின் எந்த நாட்டிலும் ஒரு சந்தேகநபரை விசாரணைப் பிரதானியாக நியமிக்க மாட்டார்கள்.

உலகின் பிற நாடுகளில் அது சாத்தியமில்லாவிட்டாலும், இலங்கையில் அது சாத்தியமாகியுள்ளது” என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

No comments: