- மாளிகைக்குள் இருந்த ட்ரம்பிற்கு பாதிப்பில்லை

வெள்ளை மாளிகைக்கு அருகிலுள்ள பாதுகாப்புச் சோதனைச் சாவடி மீது இரகசிய சேவை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து, ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் அவ்வழியாக பயணித்த பாதசாரி ஒருவரும் காயமடைந்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் சம்பவம் குறித்து அமெரிக்க இரகசிய சேவை விசாரித்து வரும் நிலையில், நோர்த் லான் பகுதியில் இருந்து 30 இற்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடு சத்தங்கள் கேட்டதாக தமது ஊடகவியலாளர் தெரிவித்துள்ளதாக அல் ஜெசீரா செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.
நேற்று மாலை 6.00 மணியின் பின்னர், சந்தேகநபர் வொஷிங்டன், டி.சி.யில் உள்ள 17ஆவது தெரு மற்றும் பென்சில்வேனியா அவென்யூ சந்தியில் அமைந்திருந்த இரகசிய சேவை சோதனைச் சாவடிக்கு வந்த சந்தேகநபர் ஒருவர் தனது பையிலிருந்து ஓர் ஆயுதத்தை எடுத்து, அங்கு பணியில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகளை நோக்கிச் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதியைப் பாதுகாக்கும் பொறுப்புள்ள மத்திய அரசாங்க அமைப்பான அமெரிக்க இரகசிய சேவை விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு பிரிவினர் பதிலுக்கு மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் சந்தேகநபர் காயமடைந்துள்ளதோடு, பின்னர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டின் போது அவ்வழியில் பயணித்த நபர் ஒருவர் காயமடைந்துள்ளார். அவர் சந்தேகநபரின் ஆரம்பகட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தாரா அல்லது அதனைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சண்டையின் போது காயமடைந்தாரா என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவ்வேளையில் வெள்ளை மாளிகைக்குள் இருந்ததால் அவருக்கு எவ்வி பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் வெள்ளை மாளிகை உடனடியாகப் பூட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் இரகசிய சேவை அதிகாரிகள் எவரும் காயமடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
No comments: