News Just In

5/24/2026 03:41:00 PM

தங்கச் சங்கிலி கொள்ளைச் சம்பவத்தில் அதிர்ச்சி கைது! – 80 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மீட்பு!

தங்கச் சங்கிலி கொள்ளைச் சம்பவத்தில் அதிர்ச்சி கைது! – 80 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மீட்பு



மேல் மாகாணத்தின் பல பகுதிகளில் பெண்களின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலிகளை கொள்ளையிட்ட சந்தேக நபர் ஒருவர், மேல் மாகாண தெற்குப் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து சுமார் 80 இலட்சம் ரூபா பெறுமதியான 18 தங்கச் சங்கிலிகளும், இரண்டு திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், சந்தேக நபரிடம் இருந்து 17 கிராம் 800 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த மூன்று மாத காலப்பகுதியில் மஹரகம, ஹோமாகம, மீகொட, மிரிஹான, கொட்டாவ மற்றும் மாலபே உள்ளிட்ட பகுதிகளில், ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிள்களில் பயணித்த பெண்களின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலிகள், மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரால் பறிக்கப்பட்டதாக பல முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில், கிடைத்த தகவலின் அடிப்படையில் ஹோமாகம வைத்தியசாலை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட குற்றத்தடுப்பு நடவடிக்கையின்போது, சந்தேக நபர் மோட்டார் சைக்கிளில் வந்தபோது ஜீப் வாகனத்தால் வழிமறித்து கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆரம்ப விசாரணைகளில், அவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் கடந்த மார்ச் 10 ஆம் திகதி மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை அருகில் திருடப்பட்டதாக தெரியவந்துள்ளது. அதே மோட்டார் சைக்கிளை பயன்படுத்தியே பல கொள்ளைச் சம்பவங்களை அவர் மேற்கொண்டதும் உறுதியாகியுள்ளது.

மேலும், கிரேன்ட்பாஸ் பகுதியில் மற்றொரு மோட்டார் சைக்கிளையும் அவர் திருடியதாகவும், அதுவும் பொலிஸாரால் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் அனைத்தும் மஹரகம பகுதியில் உள்ள ஒரே அடகு வைக்கும் நிலையத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பன்னிபிட்டிய பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய சந்தேக நபர், கடுமையான போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

No comments: