News Just In

6/27/2022 06:13:00 AM

எரிபொருள் விலை அதிகரிப்பு - மட்டக்களப்பில் இப்படியொரு நல்லுள்ளமா?

மட்டக்களப்பு நகரில் உள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு நேற்று அதிகாலை 13,000 லீற்றர் பெற்றோல் கொண்டு வரப்பட்டுள்ளது.

மேற்படி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோலை கொள்வனவு செய்வதற்காக கடந்த இரவு முழுவதும் வாகனங்கள் சகிதம் பொது மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த நிலையில் நேற்று அதிகாலை பெற்றோல் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில் எரிபொருட்களின் விலைகள் நேற்று (26) திகதி அதிகாலை முதல் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பெற்றோலின் விலையானது 50 மற்றும் 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த இரவு முழுவதும் காத்துக்கிடந்த மக்களது கஸ்ட நிலையினை உணர்ந்த மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் தலைவரும் மட்டக்களப்பு ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளருமான முத்துக்குமார் செல்வராசா பழைய விலைக்கே தனது எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட பெற்றோலை விற்பனை செய்துள்ளார்.

இந்நிலையில் குறித்த ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 92 ஒக்டேன் பெற்றோலை பழைய விலையான 420 ரூபாவிற்கும் 95 ஒக்டேன் பெற்றோலை பழைய விலையான 450 ரூபாவிற்குமே விநியோகம் செய்துள்ளார்.

அதே வேளை குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மதகுருமாருக்கும், கடந்த 5 நாட்களாக எரிபொருள் இன்றி தமது சேவையை வழங்க முடியாதிருந்த மட்டக்களப்பு மாநகர சபை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் அடங்கலாக 50 பேருக்கும் முன்னுரிமை அடிப்படையில் எரிபொருளை வழங்கியமையானது சிறந்ததொரு மனிதாபிமான செயற்பாடாக மட்டக்களப்பு மக்களால் பார்க்கப்பட்டது மட்டுமல்லாது, குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளரான முத்துக்குமார் செல்வராசா அவர்களுக்கு குறித்த எரிபொருள் நிலையத்திற்கு வருகை தந்த மதகுருமார், பொதுமக்கள், ஆட்டோ சாரதிகள் மற்றும் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் உள்ளிட்டோரினால் பாராட்டி நன்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இராணுவத்தினரும், பொலிஸாரும் கடமையில் ஈடுபட்டிருந்ததுடன், சீரான முறையில் எரிபொருள் வழங்கப்பட்டிருந்தது.

(சுதா)

No comments: