News Just In

10/24/2021 09:13:00 AM

வரலாற்றை மீட்டிப்பார்த்த இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழா நிகழ்வு !

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 25 ஆண்டுகள் நிறைவினை சிறப்பிக்கும் வெள்ளி விழா நிகழ்வுகளும், பல்கலைக்கழக ஸ்தாபகர் தின சிறப்புரையும் கொவிட்-19 சுகாதார வழிகாட்டல்களுக்கமைய சனிக்கிழமை (23) பல்கலைக்கழக மாநாட்டு மண்டபத்தில் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தலைமையில் இடம்பெற்றன.

பொறியியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எஸ்.எம். ஜூனைடீனின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் பல்கலைக்கழகத்தின் ஸ்தாபக உபவேந்தர் பேராசிரியர் எம்.எல்.ஏ. காதரின் உரை வாசிக்கப்பட்டது. தொடர்ந்து ஸ்தாபக பதிவாளர் ஏ.எல். ஜெளபர் சாதிக், ஸ்தாபக நிதியாளர் குலாம் றஷீத் ஆகியோரது உரைகளும் இடம்பெற்றன. இவர்களது உரையினை அடுத்து பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர் றமீஸ் அப்துல்லாவினால் பல்கலைக்கழக வெள்ளி விழா சிறப்புரை இடம்பெற்றது. இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கடந்த 25 ஆண்டுகால கல்விப் பயணம் குறித்தும் அதன்போதான அடைவுகள், எதிர்காலத்தில் இப்பல்கலைக்கழகம் பயணிக்க வேண்டிய பாதை உள்ளிட்ட விடயங்களை அவரது உரை குறிப்புணர்த்தியது.

உபவேந்தர் உரையினைத் தொடர்ந்து, வெள்ளி விழா நினைவு மலர் அதன் பதிப்பாசிரியரும் நூலகருமான எம்.எம். றிபாயுடீனினால் வெளியிட்டு வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2020ஆம் ஆண்டுக்கான உபவேந்தர் விருதுகளை கலை கலாசார பீடத்தினைச் சேர்ந்த பேராசிரியர் எம்.எம். பாஸில், கலாநிதி எஸ்.எம். அய்யூப், முகாமைத்துவ வர்த்தக பீடத்தினைச் சேர்ந்த பேராசிரியர் கே.எம். முபாறக், பேராசிரியர் எஸ். சப்றாஸ் நவாஸ், பேராசிரியர் எம்.ஐ.எம். ஹிலால், தொழில்நுட்ப பீடத்தினைச் சேர்ந்த கலாநிதி யு.எல்.ஏ. மஜீட், கலாநிதி எம்.ஜீ.எம். தாரிக், கலாநிதி ஏ.என்.எம். முபாறக், கலாநிதி ஏ.டீ.என்.ரீ. குமார, கலாநிதி முனீப் எம். முஸ்தபா ஆகியோர் பெற்றுக் கொண்டனர். மற்றும் 2021ஆம் ஆண்டுக்கான உபவேந்தர் விருது வழங்கலில், கலை கலாசார பீடத்தினைச் சேர்ந்த கலாநிதி ஏ.எம்.எம். நவாஸ், எம்.ஏ.எம். பௌசர், பொறியியல் பீடத்தினைச் சேர்ந்த பேராசிரியர் ஏ.எம். முஷாதிக் ஆகியோருக்கு உபவேந்தர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் இப்பல்கலைக்கழகத்தில் நீண்டகாலம் சேவையாற்றியவர்களுக்கான விருதுகளும் வழங்கப்பட்டன.

வெள்ளி விழா நிகழ்வோடு இணைந்ததாக வருடாந்த பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகர் தின சிறப்புரை நிகழ்த்தப்பட்டது. இச்சிறப்புரையினை பல்கலைக்கழக ஸ்தாபகரின் மருமகனும் வைத்தியருமான எம்.ஏ.எம். ஜெஸீம் அவர்கள் இணைய வழியினூடாக நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது. அவர் தனது உரையில், பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகரான மர்ஹூம் கலாநிதி எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களை நினைவுகூர்ந்ததுடன் அவரது காத்திரமான பங்களிப்புக்கள் குறித்தும் சிலாகித்துப் பேசியிருந்தார். வெள்ளி விழா நிகழ்வின் அடுத்த முக்கிய விடயமாக, பல்கலைக்கழக நூலகத்திற்கான நூல்கள் பல அன்பளிப்பு செய்து வைக்கப்பட்டதுடன் பல்கலைக்கழகத்தின் ஆவணப் படமொன்றும் திரையிடப்பட்டது. உத்தியோகபூர்வ நிகழ்வுகள் முடிவுற்றதும் பல்கலைக்கழக நூலகத்தின் ஆவணக்காப்பக பிரிவு உபவேந்தரினால் திறந்துவைக்கப்பட்டதுடன் “ஒரே மக்கள், ஒரே தேசம், ஒரே இலங்கை” என்ற தொனிப்பொருளிலான புத்தகக் கண்காட்சியும் இடம்பெற்றது.

நூருல் ஹுதா உமர்





No comments: