News Just In

10/24/2021 08:09:00 AM

ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான கல்வி செயற்பாடுகள் நாளை ஆரம்பம் : புலமைப் பரிசில் , உயர்தர பரீட்சைகள் பிற்போடக்படக் கூடும் -கல்வி அமைச்சு

நாடளாவிய ரீதியிலுள்ள சகல ஆரம்ப பிரிவு பாடசாலைகளிலும் , ஏனைய பாடசாலைகளிலுள்ள ஆரம்ப பிரிவுகளும் நாளை திங்கட்கிழமை முதல் கல்வி செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்தார்.

நாளை திங்கட்கிழமை முதல் ஆரம்ப பாடசாலைகளுக்கு கல்வி செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆரம்ப பிரிவுகளைக் கொண்ட பாடசாலை மாத்திரம் ஆரம்பிக்கப்படவுள்ளதா? அல்லது சகல பாடசாலைகளிலும் ஆரம்ப பிரிவுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதா? என்பது தொடர்பில் காணப்பட்ட தெளிவின்மைக்கு விளக்கமளிக்கும் போதே மேலதிக செயலாளர் எல்.எம்.டி.தர்மசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டிலுள்ள சகல அரச மற்றும் தனியார் பாடசாலைகளில் முதலாம் வகுப்பு தொடக்கம் 5 ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகள் நாளை திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளன. முதற்கட்டமாக 200 க்கும் குறைவான மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட பாடசாலைகள் கடந்த 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.

அதற்கமைய இரண்டாம் கட்டத்தின் கீழ் 200 க்கும் அதிகமான மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட பாடசாலைகளில் ஆரம்ப பிரிவிற்கான கற்பித்தலை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய பாடசாலைகளை ஆரம்பிப்பதற்காக மாகாண ஆளுனர்கள் , மாகாண செயலாளர்கள் , மாகாண கல்வி பணிப்பாளர்கள் , வலய கல்வி பணிப்பாளர்கள் , அதிபர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றார்.

நவம்பரில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமைப்பரிசிரல் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் தொடர்பில் வினவிய போது பதிலளித்த அவர் , இந்த தேசிய பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு தொடர்ச்சியாக முறையாக கற்கக் கூடிய வாய்ப்பு கிடைக்கப்பெறவில்லை. எனவே அவர்களுக்கான பாடத்திட்டங்களை நிறைவு செய்ய வேண்டிய தேவையும் காணப்படுகிறது. எனவே ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ள தினங்களில் அன்றி இந்த பரீட்சைகள் பிற்போடக்படக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமுள்ளன என்றார்.

No comments: