News Just In

10/28/2025 09:51:00 AM

லசந்த கொலை 15 இலட்சம் ரூபாய் ஒப்பந்தமா?

லசந்த கொலை 15 இலட்சம் ரூபாய் ஒப்பந்தமா?



வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்கிரமசேகர சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், சுமார் 15 இலட்சம் ரூபாய் ஒப்பந்தத்தின் பேரில் நடத்தப்பட்டது என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலையாளி கைது செய்யப்பட்டபோது, இந்தக் கொலை ‘டுபாய் லொக்காவின்’ ஒப்பந்தத்தின் பேரில் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட 6 சந்தேக நபர்களிடம் பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு தற்போது விசாரணை நடத்தி வருகிறது.

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்கிரமசேகர கடந்த புதன்கிழமை, பிரதேச சபையின் பொது மக்கள் தினத்தில் தனது அலுவலகத்தில் இருந்தபோதே சுட்டுக் கொல்லப்பட்டார்.

மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற சந்தேக நபர்களைக் கண்டுபிடிக்க பல விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்தன.

இதற்காக சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இதன்படி, சந்தேக நபர்கள் கேகிராவ பகுதியில் மறைந்திருப்பது அடையாளம் காணப்பட்டது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள், மேலும் பல பொலிஸ் குழுக்களுடன் இணைந்து, நேற்று (26) அதிகாலை கேகிராவ 50 வீட்டு தொகுதி பகுதியில் பயன்படுத்தப்படாத காணியில் இருந்த வீட்டினை முற்றுகையிட்டனர்.

அங்கு பெண் ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் கொலைச் சம்பவத்தின் போது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவரும் கைதாகியிருந்தார்.

கைது செய்ய முற்பட்டபோது பொலிஸாருக்கும் சந்தேக நபர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு, அதில் ஒரு சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளார்.

அவ்வாறு தப்பிச் சென்றவர் பிரதேச சபைத் தலைவரைக் கொலை செய்ததாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து துப்பாக்கிச் சூடு நடத்தியவரைக் கண்டுபிடிக்க விரிவான விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.

இதற்கு குற்றச் சம்பவம் நடந்த நாளின் சிசிடிவி காட்சிகளும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பமும் பயன்படுத்தப்பட்டன.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மாறுவேடமிட்டிருக்கக்கூடிய அனைத்து வழிகளையும் அனுமானித்து, புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புகைப்படங்களைத் தயாரித்து, பொலிஸ் அதிகாரிகள் உட்பட அனைத்து விசாரணை அதிகாரிகளின் கைப்பேசிகளுக்கும் அனுப்பினர்.

இதற்கிடையில், தப்பிச் சென்ற துப்பாக்கிச் சூடு நடத்தியவர் நேற்று அதிகாலை கேகிராவிவிலிருந்து பேருந்து மூலம் கொழும்புக்கு வந்ததாக விசாரணை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.

அந்தத் துப்புகளின் அடிப்படையில் பொலிஸ் அதிகாரிகள் கொழும்பு, மஹரகம, நுகேகொடை, கொட்டாவ, அத்துருகிரிய உட்பட பல இடங்களில் விசேட தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதனிடையே கொழும்புக்கு வந்த சந்தேக நபர், அங்கிருந்து பொரளை சஹஸ்புர வீட்டுத் தொகுதிக்கு மிகவும் சூசகமான முறையில் சென்றுள்ளார்.

அங்கு தனது தோற்றத்தை மாற்றியமைக்க தலைமுடியை வெட்டி, உடைகளை மாற்றிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் போதைப்பொருளை பயன்படுத்திய சந்தேக நபர், தனது கைப்பேசியை சார்ஜ் செய்ய அங்கிருந்த ஒருவரிடம் கொடுத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன் பிறகு துப்பாக்கிச் சூடு நடத்தியவர் முச்சக்கர வண்டியில் நுகேகொடை நோக்கிச் சென்றுள்ளதாக விசாரணை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

No comments: