முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுவதானது, சதித்திட்டத்தின் ஒரு அங்கமே என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டின் நெருக்கடி நிலமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இவ்வாறு கூறியிருந்தார். மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுடன் பகிரங்கமாக கலந்துரையாடி உரிய உடன்படிக்கைக்கு அமைய அமைச்சரவையை உருவாக்கினால் மக்கள் அமைச்சரவையை ஏற்றுக்கொள்வார்கள்.
இதுவரை கட்சிகளை அமைச்சரவையில் இணையுமாறு ரணில் அழைக்கவில்லை. என்றாலும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தனித்தனியாக இரகசிய கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.
கட்சிகளுடன் சம்பிரதாயமான வெளிப்படையான கலந்துரையாடலுக்குப் பின்னர் முறையான உடன்படிக்கைக்கு அமைவாக, அமைச்சரவை அமைக்கப்பட்டால் தான் அனைவரும் அதனை ஏற்றுக்கொள்வர்.
இப்போதும் அரசியல் கட்சிகளுடன் வெளிப்படையான உரையாடல்களை நடத்தி சரியான அரசாங்கத்தை அமைக்க முடியும்” என்றார்.
No comments: